பூந்தமல்லி, ஏப். 20: குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம் பகுதியில் ஒரு தம்பதி தங்களது ஐந்து வயது மகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று கணவன் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில், வீட்டில் மனைவி மட்டும் தனியாக இருக்கும்போது, அவர்களது குழந்தை திடீரென காணாமல் போனது. இத்னால் பதற்றமடைந்த தாய், அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காததால், சந்தேகம் அடைந்து, வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்று பார்த்தபோது, அங்கிருந்த கழிவறையில் இருந்து குழந்தை அழுதுகொண்டே வெளியே வந்தது. மேலும், வீட்டின் உரிமையாளர் செல்வம் (48) என்பவரும் அங்கு சுவருக்கிடையே மறைந்து நின்று கொண்டிருந்தான்.
இதுகுறித்து தாய் குழந்தையிடம், ஏன் அழுகிறாய்? என்ன நடந்தது என்று விசாரித்தார். இதில், வீட்டின் உரிமையாளர் செல்வம், சிறுமியை ஆசை வார்த்தை கூறி தனியாக மொட்டை மாடி கழிவறைக்கு அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய், கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினர், வீட்டின் உரிமையாளர் செல்வத்திற்கு தர்ம அடி கொடுத்தனர். பின்னர், இதுகுறித்து பல்லாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
விரைந்து சென்ற போலீசார், அங்கு பொதுமக்களின் தாக்குதலில் இருந்து செல்வத்தை மீட்டு, சிகிச்சைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், நடந்த விசாரணையில், வீட்டின் உரிமையாளர் செல்வம், சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதால், போலீசார் அவன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து, சிறையில் அடைத்தனர்.
