சித்திரை பிரமோற்சவ விழாவின் 3ம் நாளில் வீரராகவ பெருமாள் கோயில் கருட சேவை உற்சவம் விமரிசை

திருவள்ளூர், ஏப்.25: திருவள்ளூர் வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில், சித்திரை பிரம்மோற்சவத்தின் 3ம் நாள் விழாவில், கருட சேவை உற்சவம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. திருவள்ளூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், சித்திரை பிரம்மோற்சவ விழா கடந்த 22ம் தேதி தொடங்கி மே 1ம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழாவையொட்டி, கடந்த 22ம் தேதி காலை 4.15 மணிக்கு த்வஜாரோஹனம் சித்திரை பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு, 5.30 மணிக்கு தங்க சப்பரம் புறப்பாடும், 11 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணியளவில் சிம்ம வாகனத்தில் வீரராகவர் ஸ்ரீ தேவி, பூதேவியுடன் வீதி புறப்பாடு நடைபெற்றது.

இதனையடுத்து, கடந்த 23ம் தேதி காலை 5 மணிக்கு ஹம்ச வாகனத்தில் வீதி புறப்பாடும், 9.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சூரிய பிரபை புறப்பாடும் நடைபெற்றது. விழாவின், நேற்று (24ம் தேதி) காலை 4 மணியளவில் கருட சேவை (கோபுர தரிசனம்) காலை 6 மணிக்கு வீதி புறப்பாடும், மாலை 3 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு அனுமந்த வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெற்றது. அதேபோல், இன்று (25ம் தேதி) காலை 5 மணிக்கு சேஷ வாகனத்தில் புறப்பாடும், 10 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு சந்திர பிரபையும், 26ம் தேதி காலை 4 மணிக்கு நாச்சியார் திருக்கோலமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு யாளி வாகனத்தில் வீதி புறப்பாடும் நடைபெறுகிறது. மேலும், 27ம் தேதி காலை 5 மணிக்கு வேணுகோபாலன் திருக்கோலம் சூர்ணாபிஷேகமும், 6 மணிக்கு வெள்ளி சப்பரமும், 10.30 மணிக்கு திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு யானை வாகனமும், 28ம் தேதி காலை 5.15 மணிக்கு தேருக்கு எழுந்தருளுதலும் 7:30 மணிக்கு தேர் புறப்பாடும், இரவு 6.30 மணியளவில் தேரிலிருந்து எழுந்தருளி திருமஞ்சனமும், இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு எழுந்தருளும் நடைபெறுகிறது.

29ம் தேதி காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், இரவு 7.30 மணிக்கு குதிரை வாகனமும், 30ம் தேதி காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்தவாரியும், இரவு 7.30 மணிக்கு விஜயகோடி விமானமும், வரும் மே 1ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், 10:30 மணிக்கு துவாதச ஆராதனையும், இரவு 9 மணிக்கு கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு த்வஜ அவரோகணமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கவுரவ ஏஜென்ட் ஸ்ரீ ரங்கநாதன், மக்கள் தொடர்பு அலுவலர்கள், கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.

Related Stories: