சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்கள் உள்நாட்டு விமானங்களில் கட்டணம் பலமடங்கு உயர்வு: பயணிகள் அவதி

சென்னை: தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு படையெடுத்த பொதுமக்களால் சென்னையில் இருந்து இயங்கும் உள்நாட்டு விமானங்களில் டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்ததால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். ஏராளமான மக்கள், விமானங்களில் சொந்த ஊர்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளதால், நேற்று முன்தினம் இரவில் இருந்து, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோவை, சேலம் செல்லும் விமானங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்ததால் விமான டிக்கெட்கள் விற்றுத்தீர்ந்தன.

ஒரு சில விமானங்களில் குறைந்த எண்ணிக்கையில் டிக்கெட்கள் இருந்தன. இதனிடையே, நேற்று சென்னையில் இருந்து இயக்கப்படும் உள்நாட்டு விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
சென்னை – தூத்துக்குடி சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.5,354ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.17,527ஆக உயர்ந்தது. பெங்களூர் வழியாக தூத்துக்குடி ரூ.17,716, சென்னை – மதுரை சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.6,670ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.13,320ஆக உயர்ந்தது. பெங்களூர் வழியாக மதுரை செல்ல ரூ.29,397 கட்டணம் வசூலிக்கப்பட்டது.

சென்னை – திருச்சி இடையே சாதாரண நாட்களில் கட்டணம் ரூ.3,677ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.14,237ஆக உயர்ந்தது. சென்னை – கோவை சாதாரண நாட்கள் கட்டணம் ரூ‌4,634ஆக இருந்த நிலையில், நேற்று ரூ.16,339ஆக உயர்ந்தது. சென்னை – சேலம் சாதாரண நாட்கள் கட்டணம் ரூ.3,319, நேற்றைய கட்டணம் ரூ.12,027ஆக உயர்ந்தது. இவ்வாறு விமான டிக்கெட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்தது. ஆனாலும் சொந்த ஊர்களில் சென்று, தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமான டிக்கெட் கட்டணம் அதிகரிப்பு குறித்து கவலைப்படாமல், பயணிகள் பலர், போட்டி போட்டுக் கொண்டு, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து விமானங்களில் பயணித்து சொந்த ஊர்களுக்கு சென்று சேர்ந்தனர். விமான டிக்கெட் கட்டணம் பலமடங்கு உயர்ந்த நிலையில், பெரும்பாலான விமானங்களில் டிக்கெட் இல்லாததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

Related Stories: