ஓசூர்: ஓசூர் அருகே நேற்று காரும்-தனியார் சொகுசு பஸ்சும் மோதிய விபத்தில், பெங்களூருவில் இருந்து தேர்தலில் வாக்களிக்க வந்த அண்ணன், தம்பி உள்பட 3 வாலிபர்கள் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கலப்பம்பாடி கடமடை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(25). இவர் கர்நாடக மாநிலம் எடவஅள்ளி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கம்பவுண்டராக பணியாற்றி வந்தார். இவரது உறவினரான தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் சிகரலஅள்ளியைச் சேர்ந்த வீரமணி(25) என்பவர் பெங்களூரு கே.ஆர். புராவில் சிப்ஸ் கடை நடத்தி வந்தார்.
அந்த கடையில், தர்மபுரி மாவட்டம் பாளையம்புதூரைச் சேர்ந்த மாரி(28) மற்றும் அவரது தம்பி பிரதீப்(25) ஆகியோர் பணியாற்றி வந்தனர். தமிழக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று(23ம் தேதி) நடைபெறுவதையொட்டி, உறவினர்களான நான்கு பேரும் வாக்களிப்பதற்காக, வீரமணிக்கு சொந்தமான காரில் சொந்த ஊர் புறப்பட்டனர். காரை வீரமணி ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை 3.45 மணியளவில், ஓசூர்- ராயக்கோட்டை சாலையில் உத்தனப்பள்ளி அருகே சானமாவு அரசு உயர்நிலைப்பள்ளி அருகே வந்த போது, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையிலிருந்து ஓசூரை நோக்கி வந்த தனியார் ஆம்னி பஸ்சும், காரும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் அப்பளம்போல் நொறுங்கியது. காரில் பயணம் செய்த வீரமணி, மாரி மற்றும் அவரது தம்பி பிரதீப் ஆகிய மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
படுகாயமடைந்த சதீஷ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவலறிந்த உத்தனப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில், பஸ்சில் வந்த 13 பயணிகள், அதிர்ஷ்டவசமாக காயங்களின்றி உயிர் தப்பினர். இதையடுத்து, விபத்தில் சிக்கிய கார் மற்றும் பஸ் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்த மாரிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்த போது, விபத்தில் சிக்கி அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
