சென்னை: பசிபிக் பெருங்கடல் பகுதியில் இருந்து வெப்பக் காற்று மேற்கு நோக்கி பயணிக்கும் காரணத்தால் வங்கக் கடல் பகுதியில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும். அதனால் தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன் தொடர்ச்சியாக இயல்பைவிட 4 டிகிரி செல்சியசை விட வெப்பம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வறண்ட வானிலை காரணமாக தமிழகத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களிலும் நேற்று மழை பெய்துள்ளது. பிற இடங்களில் வறண்ட வானிலை நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாக இருந்தது. மற்ற இடங்களில் இயல்பை ஒட்டியே இருந்தது.
ஒரு சில இடங்களில் வேலூர் உள்பட 106 டிகிரி வெயில் கொளுத்தியது. வெப்பநிலையை பொருத்தவரையில் 26ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்துக்கான வாய்ப்பு குறைவு. இருப்பினும் தற்போதுள்ள நிலையில் இருந்து சற்று உயரவும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக ஒரு சில இடங்களில் இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியசை விட அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வெப்பநிலை அதிகரித்து 101 டிகிரி வெயில் நிலவும் வாய்ப்புள்ளது. அதிக வெப்பமும், ஈரப்பதமும் உள்ள நிலையில் சென்னையில் அசவுகரியம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
