சென்னை: பொன்னேரி அடுத்த பஞ்செட்டியில் திங்கட்கிழமை நடிகர் விஜய் ரோடு ஷோவில் பங்கேற்றார். இதற்காக நீலாங்கரையிலிருந்து புறப்பட்டு ரோடு ஷோ நடைபெறும் இடத்திற்கு வரும் வழி நெடுகிலும் அவரது ரசிகர்கள் திரண்டு உற்சாக வரவேற்பளித்தனர். வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் விஜய் வாகனம் வந்தபோது செங்குன்றம் அடுத்த அம்பேத்கர் நகரில் அலமாதி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரான்சிஸ் (25) பிரசார வாகனத்தின் முன் சென்று விஜயுடன் செல்பி எடுக்க முற்பட்டார்.
அப்போது, கூட்டத்தில் தடுமாறி கால் தவறி கீழே விழுந்த நிலையில் விஜய்யின் பிரசார வாகனத்தின் முன் சக்கரம் பிரான்சிஸ் கால் மீது ஏறியது. இதில், காயமடைந்த பிரான்சிஸ் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றார். தொடர்ந்து எலும்பு முறிவு காரணமாக மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், காயமடைந்த இளைஞனின் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே விபத்து தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள விஜயின் ரசிகர் பிரான்சிஸ், ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருவதாகவும், திருமணம் ஆகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ள நிலையில் நடிகர் விஜயை பார்க்க சென்றபோது அவரது பிரசார வாகனத்திலேயே சிக்கி விபத்தில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த 2 நாட்களாக தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த யாரும் தம்மை வந்து சந்திக்கவில்லை என்றும், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் நடிகர் விஜய் தனது சிகிச்சைக்கு உதவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
