வெட்டப்பட்ட ஆணுறுப்பு மீண்டும் இணைக்கப்பட்டது: ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை சாதனை

சென்னை: மனநல குறைபாடு உள்ள 38 வயதான நபர் தன்னுடைய ஆணுறுப்பை கத்தரிக்கோலால் வெட்டித் துண்டித்துக்கொண்டார். இவர் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உடனடியாக ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை பிரிவைச் சேர்ந்த மருத்துவர்களால் முதற்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் முதல்வர் சாந்தாராமன் வழிகாட்டுதலின் படி, ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைத் துறைத் தலைவர் மகாதேவன் தலைமையில் ஒரு சிறப்பு மருத்துவக்குழு அமைக்கப்பட்டது.

இதில் மருத்துவர்கள் ரஷீதா பேகம், சுஜா, முதுநிலை மாணவர்கள் பவித்ரா மற்றும் நீரஜ் குமார் ஆகியோருடன் இணைந்து மயக்கவியல் மருத்துவர் இம்ரான் தலைமையிலான குழுவுடன் முதலுதவி வழங்கிய பின்பு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை தொடங்கப்பட்டது. பிப்ரவரி மாதம் 12ம் தேதி மாலை சுமார் 7 மணியளவில் தொடங்கிய இந்த மிகச் சிக்கலான தொடர் ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சை, மறுநாள் அதிகாலை 1.30 மணிவரை மருத்துவக்குழுவால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது. முதலில் மருத்துவ பயனாளியின் நீர் வெளியேறும் பாதை (யூரித்ரா – Urethra), சதைப்பகுதிகள் மற்றும் ரத்தநாளங்கள் மிக நுணுக்கமாக இணைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து நரம்புகளும் இணைக்கப்பட்டன. இந்நிலையில் இயற்கை நிலைக்கு அருகிலான செயல்பாட்டை வழங்கும் வகையில் ஆணுறுப்பு மறுசீரமைக்கப்பட்டது. அறுவைச் சிகிச்சைக்கு பிறகு, மருத்துவ பயனாளி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது. அவரின் ரத்த ஓட்டம் சீராக இருப்பதாகவும், எவ்வித சிக்கல் இல்லாமல் இயற்கை வழியாக சிறுநீர் கழிப்பதாகவும் மருத்துவக்குழுவினர் தெரிவித்தனர். இந்நிலையில், அவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இது முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ பயனாளிக்கு எவ்வித கட்டணமின்றி இலவசமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டது.

Related Stories: