கோவை: கோவை தெற்கு தொகுதி பாஜ சட்டமன்ற உறுப்பினரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன், காலில் ஏற்பட்ட தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ., தேசிய மகளிரணி தலைவரும், கோவை வடக்கு தொகுதி வேட்பாளருமான வானதி சீனிவாசன், வலது காலில் ஏற்பட்ட லேசான தொற்று காரணமாக நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டு, இரண்டு நாட்கள் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மருந்து ஒவ்வாமை காரணமாக அவருக்கு லேசான பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் அவர், தீவிர சிகிச்சை பிரிவுக்கு (ஐசியூ) மாற்றப்பட்டு, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டார். தற்போது அவர் நலமாக உள்ளார். இயல்பாக பேசி வருகிறார். அவர் முழுமையாக குணமடைய இன்னும் 3 முதல் 4 நாட்கள் வரை சிகிச்சை தேவைப்படுவதால், தொடர்ந்து மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* உடல் நலம் விசாரித்த முதல்வர்
உடல் நலக்குறைவால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்ட கோவை வடக்கு தொகுதி பாஜ வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உடல்நலம் விசாரித்தார். வானதி சீனிவாசனை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குறித்தும், மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்ததோடு விரைவாக குணமடைந்து தேர்தல் களத்திற்கு திரும்ப வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதே போல ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் வானதி சீனிவாசனை தொடர்பு கொண்டு உடல்நலம் குறித்து விசாரித்தார்.
