சொந்த சமூகத்திற்கு என்ன செஞ்சாரு..? எடப்பாடிக்கு ஓட்டு கிடையாது: கொங்கு வேளாள கவுண்டர்கள் பேரவை அறிவிப்பு

கோவை காளப்பட்டியில் உள்ள தனியார் ஓட்டலில் கொங்கு வேளாளக்கவுண்டர்கள் பேரவையின் மாநில தலைவர் திருச்சி தேவராசன், மாநில ஒருங்கிணைப்பாளர் விசா சண்முகம், மூத்த நிர்வாகி துரை ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 1.50 கோடி பேர் உள்ளோம். முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியில் எங்கள் சமூகத்திற்கு பல்வேறு திட்டங்கள், சலுகைகள் வழங்கப்பட்டன.

இதே போல் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் திட்டங்கள், சலுகைகள் அளித்துள்ளார். கோவை வளர்ச்சிக்காக தற்போதைய அரசு பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. கோவை மாநகராட்சிக்கு என ரூ.500 கோடிக்கு மேல் நிதி வழங்கப்பட்டு பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் கோவை மேலும் வளர்ச்சி அடையும். வரும் சட்டமன்ற தேர்தலில் 10 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய பேரவை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வீடுதோறும் சென்று தீவிர பிரசாரம் மேற்கொள்வார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினார். அப்போது, எடப்பாடி பழனிசாமி உங்கள் சமூகத்தை சேர்ந்தவர் தானே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, எடப்பாடி எங்கள் சமூகம் என்றாலும், அவர் எங்களது சமூகத்திற்காக என்ன செய்தார். அவர் இதுவரை எதுவும் செய்யவில்லை. அவர் முதல்வர் வேட்பாளர் என்பதால் வாழ்த்து தெரிவித்து இருக்கிறோம். ஆனால் வாக்களிக்க மாட்டோம். மேலும், செந்தில்பாலாஜி கரூரில் இருந்து இங்கு வந்து போட்டியிடுவது, பயந்து வரவில்லை. அவர் கோவையின் வளர்ச்சிக்காக வந்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: