விமர்ச்சிப்பதை தவிர்க்கும் விஜய் எடப்பாடி பழனிசாமி – விஜய் ரகசிய கூட்டணி? பாஜவின் பி டீம் தவெக

சென்னை: அதிமுக, பாஜவை தவெக தலைவர் விஜய் விமர்ச்சிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி – விஜய்யின் ரகசிய கூட்டணியை உறுதிபடுத்தும் வகையில் நடைபெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் அரசியல் களத்தில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சி தொடங்கியதிலிருந்தே விஜய் அதிமுகவை மட்டும் விமர்சிக்காமல் தவிர்த்தே வந்தார். திமுகவையும் பாஜவையும் மட்டுமே தன்னுடைய எதிரியாக அறிவித்தார். விஜய் தங்களை விமர்சிக்காததால் அதிமுக முகாமும் அமைதி காத்தது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலரும் விஜய்யை புகழ்ந்து பேசி வந்தனர்.

இதற்கிடையில் தான் அதிமுக – பாஜ கூட்டணி உருவானது. பாஜவை கொள்கை எதிரியாக அறிவித்திருப்பதால் இனி அதிமுகவுடன் கூட்டணி செல்ல முடியாது என்கிற மனநிலைக்கு விஜய் தரப்பு வந்து சேர்ந்தது. ஆரம்பத்தில் திமுக, பாஜவை கடுமையாக விமர்ச்சித்து வந்த விஜய், கரூரில் 41 பேர் பலியான சம்பவத்துக்கு பின்பு பாஜவையும், அதிமுகவையும் விமர்ச்சிப்பதை முற்றிலுமாக தவிர்த்தார். ஒன்றிய பாஜ அரசு தமிழகத்தை கடுமையாக வஞ்சித்த நிலையில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்த போது கூட விஜய் மவுனம் சாதித்தார். காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் கடும் அவதிக்குள்ளான போது கூட ஒன்றிய அரசை குறை சொல்லாமல் மாநில அரசை குறை கூறி பேசினார்.
விஜய் நடித்த ஜனநாயகன் படம் ரீலீஸ் செய்ய முடியாததற்கு யார் காரணம் என்பது அனைத்து மக்களும் அறிந்த ஒன்று.

அப்போதும் கூட ஒன்றிய அரசை எதிர்த்து ஒரு வார்த்தை கூட விஜய் பேசவில்லை. பாஜவை கொள்கை எதிரி என அறிவித்துவிட்டு பாஜவை பற்றி எதிர்த்து பேசாதது பாஜ-அதிமுக உடனான விஜய்யின் ரகசிய கூட்டணியை உறுதி செய்வதாக உள்ளது. அதோடு மட்டுமல்ல, விஜய் பெரம்பூர் தொகுதியில் போட்டியிடும் நிலையில், உண்மையிலேயே விஜய் எதிர்ப்பதாக இருந்தால் அந்த தொகுதியில் அதிமுக சரியான வேட்பாளரை நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் பாமகவுக்கு ஒதுக்கி, திண்டுக்கல்லை சேர்ந்த திலகபாமாவை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வைத்துள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் எடப்பாடி தொகுதியில் பழனிசாமியை எதிர்த்து போட்டியிட அறிவிக்கப்பட்ட தவெக வேட்பாளரின் குளறுபடி செயல் மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது. அரைகுறையாக வேட்பு மனுவை தாக்கல் செய்த தவெக வேட்பாளர் ஆவணங்களை எடுத்து விட்டு வருவதாக கூறி சென்றவர் மாயமான சம்பவம் எடப்பாடிக்கும்- விஜய்க்கும் உடனான ரகசிய கூட்டணியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. இதெல்லாம் திட்டமிட்டு அதிமுக-தவெக செய்த செட்டப் தான் என்று பேச்சுகள் வெளியாகி உள்ளது. ‘நான் உனக்கு விட்டுக் கொடுக்கிறேன், நீ எனக்கு விட்டு கொடு’ என்ற அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமி- விஜய் ஆகியோரது ரகசிய கூட்டணி இருப்பதாக விமர்ச்சனங்கள் எழுந்துள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது பாஜவின் பீ டீமாகவே தவெக செயல்படுவதாக அரசியல் விமர்ச்சனங்கள் எழுந்துள்ளது.

Related Stories: