சென்னை: உதவி செய்தவர்களிடம் ஆசி வாங்குவது என் பண்பு. அதனால் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன், என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வி.என்.ரவியை ஆதரித்து நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையானதை செய்வதுதான் சிறப்பான ஆட்சி. 2011-21 வரை நிறைய திட்டங்கள் கொடுத்தோம். அதிமுக ஆட்சியில் எதுவுமே செய்யவில்லை என்கிறார் ஸ்டாலின். வர்தா புயல் வந்தது 2 லட்சம் மெட்ரிக் டன் குப்பையை நகரத்தில் இருந்து வெளியேற்றினோம். வர்தா புயலில் மின் கம்பங்கள் சாய்ந்தன, போர்க்கால அடிப்படையில் சரி செய்தோம். மரங்கள் விழுந்தன, அதை உடனடியாக அப்புறப்படுத்தி தடையில்லா போக்குவரத்து, தடையில்லா மின்சாரம் கொடுத்தோம்.
நான் முதல்வரானபோது கடும் வறட்சி, குடிநீர் இல்லை. அப்போது வெளியிலிருந்து ரயிலில் குடிநீர் கொண்டுவந்து கொடுத்து சென்னையின் தாகம் தீர்த்தது, அதிமுக அரசு. அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி. சாதாரண கிளை செயலாளர் கூட பொதுச்செயலாளர் ஆக முடியும், எனக்கு பின்னாலும் அதிமுக நூறாண்டுகள் தொடரும் என்று ஜெயலலிதா சொன்னார், இப்போது எனக்கு அந்த வாய்ப்பை கொடுத்திருக்கிறீர்கள், எனக்கு பின் இங்குள்ள யாராவது வருவார்கள். எடப்பாடி பழனிசாமி காலை தேடிக்கொண்டிருக்கிறார் என உதயநிதி கூறுகிறார். உதவி செய்தவர்களிடம் ஆசி வாங்குவது என் பண்பு. அதிமுகவின் பண்பு. அதனால் தான் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன்.
அதிமுக ஆட்சி அமைந்த மூன்றே மாதத்தில் கஞ்சா ஒழிக்கப்படும். பெண்களை போல இனி ஆண்களும் நகர பேருந்துகளில் கட்டணம் இல்லாமல் பயணிக்கலாம். நகரப்பகுதியில் சாலையோர வியாபாரிகள் வாங்கிய கூட்டுறவு வங்கி கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். புதிதாக ரூ.2 லட்சம் வரை எவ்வித ஜாமீனும் இல்லாமல் கடன் வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகள் கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். பதிவு செய்த ஆட்டோ ஓட்டுனர்கள் புதிய ஆட்டோ வாங்க ரூ.75 ஆயிரம் மானியம் வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் வீடில்லாத அனைவருக்கும் அரசு சார்பில் நிலம் வாங்கி, அற்புதமான கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும். பட்டியலின, ஆதிதிராவிடர், மலைவாழ் மக்கள் வாரிசுகள் தனிக்குடித்தனம் சென்றாலும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
