அதிகாரிகள் பணியிட மாற்றத்தில் அரசியல் உள்நோக்கம் பாஜவின் சூழ்ச்சிகளுக்கு தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவர்: தலைவர்கள் கண்டனம்

சென்னை: உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும், பாஜவின் சூழ்ச்சிகளுக்கு தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என்றும் தலைவர்கள் கண்டனம் தெரிவத்துள்னர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு தலைமை செயலாளரையும், உயர் காவல்துறை அதிகாரிகளையும் பணியிட மாற்றம் செய்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும். அரசமைப்பு சட்டத்தின்படி, சுயேட்சையான, பாரபட்சமின்றி தேர்தலை நடத்த வேண்டிய தேர்தல் ஆணையம் நீண்ட காலமாக பாஜவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்கிற குற்றச்சாட்டு தொடர்ந்து கூறப்பட்டு வந்தது.

தமிழ்நாட்டில் இத்தகைய பணியிட மாற்றத்தின் மூலம் தேர்தல் ஆணையத்தை கைப்பிடியில் வைத்துக் கொண்டு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றியை தடுத்து விடலாம் என பாஜ இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டு மக்கள் பாஜவின் சூழ்ச்சிகளை முற்றிலும் அறிந்து வைத்திருப்பதால் தேர்தல் ஆணையத்தின் வரம்பு மீறிய இத்தகைய நடவடிக்கைக்கு உரிய பாடத்தை வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் புகட்டுவார்கள்.
இத்தகைய பணியிட மாற்றத்தை செய்வதன் மூலமாக அதிமுக, பாஜவின் தோல்வி உறுதியாகியிருக்கிறது. எனவே, எத்தகைய சாம, பேத, தான, தண்டங்களை பயன்படுத்தினாலும் தமிழ்நாட்டில் அதிமுக, பாஜ கூட்டணி ஒரு
போதும் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் நுழையவும் முடியாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் முருகானந்தம், இந்திய தேர்தல் ஆணையத்தால் மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி, வேட்புமனுக்கள் பரிசீலனை நிறைவடைந்து விட்டது. இந்த நிலையில் தலைமை செயலாளர் மாற்றம் செய்யப்பட்டதும், முன்னாள் முதல்வரின் செயலாளராக பணியாற்றியவர் புதிய தலைமை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பதும் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) நியமனம், லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி மாற்றம் உள்ளிட்ட பல உயர் அதிகாரிகள் மாற்றப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் தமிழ்நாடு அரசின் அதிகார கட்டமைப்பை நிலை குலைக்கும் அத்துமீறலாக கருதப்படுகிறது. ஒன்றிய அரசின் அழுத்தத்திற்கு தேர்தல் ஆணையம் பணிந்து செல்கிறது என்று வலுவாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் உறுதி செய்து வருகின்றன. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளால், தேர்தல் சுதந்திரமாகவும் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்குமா? என்ற பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையம் ஒன்றிய பாஜக அரசின் கைப்பாவையாக மாறியிருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாக கண்டிக்கிறது. பாஜக விற்கு சாதகமாக, பாரபட்சப் போக்கில் செயல்படுவதையும் சேர்த்து முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு வாக்காளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டு, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவு அளித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

Related Stories: