வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் சமீபத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு அவரது ரசிகர் ஒருவரால் கோயில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோயிலை பார்வையிட காட்பாடி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான துரைமுருகன் நேற்று இரவு சென்றார். அங்கு அவர் எம்ஜிஆர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
எம்ஜிஆரின் இரக்க குணமும், நற்குணங்களும் எல்லாரும் அறிந்த ஒன்று. சென்னை பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்.ஜி.ஆருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. அன்று இரவு 12 மணிக்கு நான் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் கலைஞரை சந்தித்தோம். அப்போது கலைஞர், ‘எம்.ஜி.ஆரின் திறமைக்கும் நடிப்புக்கும் தாராளமாக டாக்டர் பட்டம் கொடுக்கலாம். உனக்கு அவர் நிறைய உதவிகளை செய்திருக்கிறார். எனவே நீயே இந்த தீர்மானத்தை முன்மொழிய வேண்டும் என்றார்.
கலைஞரின் அறிவுரைப்படி, பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், நான் அந்த தீர்மானத்தை முன்மொழிந்தேன். இதை கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர், என்னை நேரில் சந்தித்தபோது மிகவும் நெகிழ்ச்சியடைந்தார். மேலும் என்னிடம், ‘கலைஞர் என்ன சொன்னார்?’ என்று கேட்க, நடந்தவற்றை நான் கூறினேன். அதைக்கேட்ட எம்.ஜி.ஆரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உடனே, என்னை ஆரத்தழுவி தனது அன்பை வெளிப்படுத்தினார். அரசியலில் எதிர் துருவங்களாக இருந்தாலும், மனிதநேயம் மற்றும் தனிப்பட்ட நட்புக்கு எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவருமே மிகவும் முக்கியத்துவம் கொடுத்தார்கள் என்பதை இதன் மூலம் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.
