மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் அன்புமணி ராமதாஸ்!!

சென்னை: எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் பாமக தலைவர் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். ஏற்கனவே அதிமுக சார்பில் போட்டியிட தம்பிதுரை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் அன்புமணி மனுத் தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் மாநிலங்களவை எம்.பி.யாக உள்ள தம்பிதுரை, ஜி.கே.வாசன், என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராசு ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. இந்த 6 எம்.பி.க்கள் காலியிடங்களை நிரப்ப தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி வேட்பு மனு தாக்கல் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி தொடங்கியது.

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க. சார்பில் 4 எம்.பி.க்களையும், அ.தி.மு.க. சார்பில் 2 எம்.பி.க்களையும் போட்டியின்றி தேர்வு செய்ய முடியும். தி.மு.க. தங்களுடைய கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தே.மு.தி.க.வுக்கு தலா ஒரு இடத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. அதிமுக சார்பில் தம்பிதுரை போட்டியிடுகிறார். மற்றொரு இடம் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது.

மாநிலங்களவை பதவிக்கு பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தேர்தல் அதிகாரியான தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசனிடம் அன்புமணி வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை தொடர்ந்து தம்பிதுரையும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த தேர்தலில் போட்டிக்கு வாய்ப்புகள் இல்லை. அனைவரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: