தனியார் பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை விதிப்பு

 

சென்னை: தனியார் பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் செயல்படும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் அரசு அனுமதிக்காக பல்வேறு நிகழ்வுகளை அந்தந்த தனியார் நிர்வாகங்கள் நடத்தி வருகின்றன. அவற்றில் அரசியல், மதம், இனம் சார்ந்த நிகழ்வுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. குறிப்பாக, ஆர்எஸ்எஸ் மற்றும் சிறுபான்மை அமைப்புகள் பள்ளி வளாகங்களில் தொடர்ந்து மதம் சார்ந்த நிகழ்வுகளை நடத்துவதாகவும் புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பிரிவினையை தூண்டும் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடை விதித்து, தமிழ்நாடு தனியார் பள்ளிகளுக்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசிதழில் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளின் அடிப்படையில் தமிழ்நாட்டில் செயல்படும் மெட்ரிக்குஷேன், சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு அனுமதி பெற்று செயல்பட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு தனியார் சட்டம் இயற்றிதுடன் தனியார் பள்ளிகளுக்கான சட்டம் மற்றும் விதிகளை ஏற்கெனவே வரையறை செய்துள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் சில நேரங்களில் சாதி மற்றும் மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வந்தன. இதனால், பள்ளி மாணவர்கள் இடையே பிரச்னை ஏற்பட்டது. ஏற்றத்தாழ்வு உணர்வுகள் தூண்டப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதுபோன்ற கசப்பான நடவடிக்கைகளை முற்றிலும் தடை செய்வதற்காக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட விதிகளில் திருத்தங்களை செய்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்திரமோகன், அரசிதழில் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளுக்கான அங்கீகாரம் பெறுவதற்குரிய கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எந்தவொரு பள்ளி வளாகமும், பள்ளி நேரத்திலோ அல்லது அதன்பின்னரோ எந்தவொரு நிகழ்ச்சியோ, கூட்டமோ, பிரசாரம் மற்றும் அறிவுரைகள் வழங்கலோ, அல்லது எந்தவொரு வெளிநபரோ, சங்கமோ அல்லது அமைப்பின் எந்த ஒரு செயல்பாட்டையும் ஏற்பாடு செய்யவும் அல்லது நடத்தவும் கூடாது.

குறிப்பாக அரசியல் அல்லது கருத்தியல், வகுப்புவாத அல்லது பிரிவினை வாதம், அல்லது பள்ளியின் கல்வி நோக்கங்களுடன் தொடர்பு இல்லாதவை, கலாசார நிகழ்வுகள், சமூக சேவைத் திட்டங்கள், ரத்ததான முகாம்கள், நினைவு விழாக்கள், அல்லது இதுபோன்ற செயல்பாடுகளில் அவை மதச்சார்பற்றவையாகவும், அரசியல்சாராதவையாகவும் இருப்பதுடன் கல்வி நிறுவனத்தின் நேரடி மேற்பார்வை மற்றும் பொறுப்பின் கீழ் நடத்தப்பட்டால் மட்டுமே் அனுமதிக்கப்படும். மேலும், அரசால் குறிப்பிடப்படும் தகுதிவாய்ந்த அதிகாரி அல்லது வேறு எந்த அதிகாரத்தின் முன் அனுமதியோ பெற வேண்டும்.

இந்த துணை விதியின் நோக்கங்களுக்காக, வகுப்புவாத அல்லது பிளவுபடுத்தும் செயல்பாடு என்பது மதம், இனம், சாதி, சமூகம், மொழி அல்லது சித்தாந்த அடிப்படையில் மாணவர்கள் இடையே ஒற்றுமையின்மை, பகைமை, வெறுப்பு அல்லது வெறுப்பை ஊக்குவிக்கும், நோக்கம் கொண்ட அல்லது சாத்தியமான எந்தவொரு செயலையும் குறிப்பதாக இருக்கும். எனவே இவற்றை ஊக்குவிக்கும் அல்லது அவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவ்வாறு அரசு கூடுதல் செயலாளர் சந்திரமோகன் அரசிதழில் தெரிவித்துள்ளார்.

Related Stories: