திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் திருக்கல்யாண வைபவம்

 

திருப்போரூர்: சென்னை அருகே வரலாற்று பிரசித்தி பெற்ற திருப்போரூர் கந்தசுவாமி திருக்கோயிலில் கடந்த 21ம் தேதி மாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 27ம் தேதியும், 3ம் தேதி தெப்போற்சவமும் மிகச் சிறப்பாக நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை வேடர்பரி உற்சவம் நடந்தது. இந்நிலையில், மாசி பிரமோற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக, இன்று காலை 9 மணியளவில் கோயிலின் உற்சவர் மண்டபத்தில் வள்ளியை முருகப்பெருமான் மணமுடிக்கும் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து, மாசி பிரமோற்சவ விழா நிறைவு பெற்று, அதற்கான கொடி இறக்கப்பட்டது.

பின்னர், இன்று காலை 10 மணியளவில் தங்க மயில் வாகனத்தில் திருமண கோலத்தில் வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவர் முருகப்பெருமான் மாட வீதியுலாவாக வந்து, அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் புதுமணத் தம்பதிகளில் பலர் கலந்துகொண்டு மணக்கோல முருகனை வழிபட்டனர். அனைத்து பெண்களுக்கும் மஞ்சள், குங்குமத்துடன் திருமாங்கல்ய கயிறுகள் அடங்கிய பிரசாத பைகள் கோயில் நிர்வாகம், பக்தர்களின் சார்பில் பிரசாத பைகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Related Stories: