பிச்சாவரத்தில் அலையாத்தி பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் : அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் பிச்சாவரத்தில் 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அலையாத்தி பாதுகாப்பு மையம், தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் மரக்காணத்தில் 50.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச பறவைகள் மையம், ‘நீலகிரி வரையாடு திட்டத்தின்’ கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார். மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருதினை மறைந்த டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கிடும் விதமாக அவரது மகனிடம் வழங்கினார்.

தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் பிச்சாவரத்தில் அலையாத்தி பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்.

தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், கிள்ளை கிராமம், முழுகுதுறையில் 26 கோடியே 50 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அலையாத்தி பாதுகாப்பு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். கரையோர நிலைப்படுத்தல், கார்பன் பிரித்தெடுத்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் புயல் எழுச்சி, தீவிர வானிலை நிகழ்வுகளுக்கு எதிரான பாதுகாப்பில் அலையாத்தி காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழ்நாடு அரசு அலையாத்தி பாதுகாப்பிற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட மற்றும் ஆராய்ச்சி சார்ந்த அணுகுமுறையை செயல்படுத்தி வருகிறது.

இச்சதுப்புநில பாதுகாப்பு மையம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பிச்சாவரம் அலையாத்திக் காடுகள் பகுதியில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும். அறிவியல் அடிப்படையிலான பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைந்த கடலோர மேலாண்மை மூலம் கடலோர சுற்றுச்சூழல் அமைப்பின் மீள்தன்மையை வலுப்படுத்துவதில் தமிழ்நாட்டின் தொடர்ச்சியான நிலைப்பாட்டை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது.அலையாத்தி சூழலியல் பற்றிய அறிவியல் விளக்கம் மற்றும் ஆராய்ச்சி, பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, காலநிலை மீள்தன்மை ஆய்வுகள் மற்றும் மறுசீரமைப்பு உத்திகள், கல்வி, தொலைத்தொடர்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு ஆகியவற்றிற்கான ஒருங்கிணைந்த தளமாக இம்மையம் செயல்படும்.இயற்கையான அலை ஓட்டங்கள், அலையாத்தி வேர் அமைப்புகள், சுற்றுச்சூழல் செயல்முறைகள் மற்றும் தொடர்புடைய பல்லுயிர் பெருக்கத்தின் பாதுகாப்பு உறுதி செய்ய அறிவியல் ரீதியாக தகவல் அளிக்கக்கூடிய மற்றும் சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்ட வடிவமைப்பு அணுகுமுறை பின்பற்றப்படும். உலக வங்கியுடன் இணைந்து தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தில் 50 கோடியே 30 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள சர்வதேச பறவைகள் மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். இச்சர்வதேச பறவைகள் மையம், கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள அகரம் காப்புக் காடு மற்றும் கழுவேலி ஈரநிலப் பறவைகள் சரணாலயம் ஆகிய இரண்டு முக்கிய இடங்களில் உருவாக்கப்படுகிறது. இது ஆராய்ச்சி, பாதுகாப்பு, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் சமூக வாழ்வாதாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் செயல்படுத்தப்படும்.

அகரம் காப்புக் காடு வளாகத்தில், விளக்க மையம், ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சிக்கான உட்கட்டமைப்பு வசதிகளுடன் நிறுவப்படவுள்ளன. இயற்கை நடைபாதைகள் உருவாக்கப்படுவதுடன், கழுவேலி குறுங்காடு அமைக்கப்படும். இது பார்வையாளர்கள், மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு சூழலியல் கற்றல் அனுபவங்களை வழங்கும்.ராம்சார் தளமான கழுவேலி ஈரநிலப் பறவை சரணாலயம், 5,151 ஹெக்டேர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இது தென் இந்தியாவின் இரண்டாவது பெரிய உவர்நீர் ஏரியாகும். மத்திய ஆசிய பறவைப் பயணப்பாதையில் அமைந்துள்ளதால், இது இடம்பெயரும் மற்றும் தங்கியிருக்கும் பறவைகளின் முக்கிய சரணாலயமாக திகழ்கிறது. இத்திட்டத்தின்கீழ், பறவைகளை பார்வையிட கோபுரம், ஈரநில நடைபாதை மற்றும் வழிகாட்டியுடன் கூடிய சுற்றுச்சூழல் சுற்றுலா வசதிகள் உருவாக்கப்படுகின்றன. இதன்மூலம் இயற்கை சுற்றுலாவை ஊக்குவிப்பதோடு, வாழிடப் பாதுகாப்பும் வலுப்படுத்தப்படும்.

சர்வதேச பறவைகள் மையம், நீண்டகால பறவை பாதுகாப்பு மற்றும் ஈரநில மேலாண்மையை மேம்படுத்துவதையும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி திறன்களை உருவாக்குவதையும், இயற்கை வழிகாட்டுதல் மற்றும் சுற்றுச்சூழல் சுற்றுலா சேவைகள் மூலம் உள்ளூர் சமூகங்களுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இம்முயற்சி, ஈரநில பாதுகாப்பு மற்றும் பறவைகள் பாதுகாப்பில் தமிழ்நாட்டை தேசிய மற்றும் சர்வதேச அளவில் முன்னணியில் நிறுத்துகிறது.

நீலகிரி வரையாடு திட்டத்தின் ஒரு மைல்கல்லாக கோயம்புத்தூரில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல்

தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாட்டினை பாதுகாப்பதற்காக அரசு முன்னெடுத்துள்ள முக்கியமான திட்டமான ‘நீலகிரி வரையாடு திட்டத்தின்’ கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.10.2023 அன்று 25.14 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து ஆண்டுக் காலத்திற்கு நீலகிரி வரையாடு திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் தனித்துவமான மலை விலங்கான நீலகிரி வரையாடு நீண்டகாலமாக வாழ்வதை உறுதி செய்யும் முழுமையான, அறிவியல் சார்ந்த கட்டமைப்பை உருவாக்கிடும். நீலகிரி வரையாடு, மேற்குத் தொடர்ச்சி மலையின் உயர்ந்த பகுதிகளில் உள்ள நுண்ணிய சோலை–புல்வெளி சூழல்களில் வாழ்கிறது. சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டதுடன், அதன் சூழலியல் மற்றும் பண்பாட்டு முக்கியத்துவத்தை முன்னிட்டு மாநில விலங்காக அறிவிக்கப்பட்டுள்ள நீலகிரி வரையாடு, தமிழ்நாட்டின் இயற்கைச் செல்வத்தின் அடையாளமாகவும், அதன் மலைவாழ் உயிரினப் பன்மையின் முக்கிய அங்கமாகவும் திகழ்கிறது.

நீலகிரி வரையாடு திட்டம் பல கூறுகளை உள்ளடக்கிய முயற்சியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் நிர்வாக வலுப்படுத்தல், ஒருங்கிணைந்த கணக்கெடுப்புகள், ரேடியோ காலர் பொருத்துதல் மற்றும் அறிவியல் கண்காணிப்பு, வரலாற்று வாழிடங்களில் மீண்டும் அறிமுகப்படுத்தல், நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை, புல்வெளி மீளமைப்பு, சுற்றுச்சூழல் சுற்றுலா மேம்பாடு, துறைத்தள திறன் உயர்த்தல் மற்றும் தகவல் பரவல் ஆகியவை அடங்கும். நீலகிரி வரையாடு வாழும் 14 வனப்பிரிவுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பரந்த நிலப்பரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு, ஒரே மாதிரியான முறைகளைப் பயன்படுத்தி நிறைவு செய்யப்பட்டன. ஏப்ரல் 24 முதல் 27, 2025-ல் 14 வனப்பிரிவுகளில் 177 கணக்கெடுப்பு பகுதிகளில் நடத்தப்பட்ட இரண்டாவது கணக்கெடுப்பில், தமிழ்நாட்டில் நீலகிரி வரையாடுகளின் எண்ணிக்கை 1,303 எனக் கண்டறியப்பட்டது. மூன்றாவது ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு 2026 ஏப்ரல் 24 முதல் 27 வரை நடைபெற உள்ளது.

துல்லியத்தை மேம்படுத்தவும், துறைத்தள ஒருங்கிணைப்பை எளிமைப்படுத்தவும், பயிற்சி பெற்ற பணியாளர்களின் அடைவுப் பட்டியல் தயாரிக்கப்பட்டது மற்றும் ‘வருடை’ எனப்படும் தனிப்பட்ட மொபைல் பயன்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டில் ஒரு பாலூட்டி இனத்தை கணக்கிடுவதற்காக உருவாக்கப்பட்ட முதல் இயங்குதள செலியாக இது திகழ்கிறது.தமிழ்நாடு கால்நடை மற்றும் வன விலங்கு மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்துடன் (TANUVAS) இணைந்து செயல்படுத்தப்பட்ட சுகாதார கண்காணிப்பு முயற்சிகள், முறையான நோய் கண்காணிப்பை வலுப்படுத்தியுள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், சில நீலகிரி வரையாடுகளில் காணப்பட்ட கட்டிகள் Taenia multiceps என்ற குடற்புழுக்களால் உருவான ‘Coenurus’ கட்டிகள் எனக் கண்டறியப்பட்டன. இந்த நோயியல் ஆய்வு, இவ்வினத்தில் முதன்முறையாக பதிவுசெய்யப்பட்டதாகும்.

பொதுமக்களின் பங்கேற்பு இந்த திட்டத்தின் முக்கிய தூணாக உள்ளது. ‘வரையாடு’ என்ற காலாண்டு செய்திமடல் தொடர்ந்து வெளியிடப்படுகிறது. அதேசமயம், ‘செய்தி சக்கரத்தில்’ என்ற விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ், திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், தேனி, கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 120-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன.இவ்வினத்தைப் பற்றிய புரிதலை முன்னேற்றிய முன்னோடி பாதுகாப்பாளர் ஈ.ஆர்.சி. டேவிதார் அவர்களின் ஆரம்பகால ஆய்வுகளை நினைவுகூர்ந்து, அக்டோபர் 7 ‘நீலகிரி வரையாடு தினம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில விலங்கான நீலகிரி வரையாடு பற்றிய பொதுமக்களின் விழிப்புணர்வையும் பெருமையையும் வலுப்படுத்துகிறது.

அடிக்கல் நாட்டப்பட்ட காந்திபுரம் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம், திட்டமிட்ட பாதுகாப்பு முயற்சியின் அடுத்த கட்டத்தை குறிக்கிறது. 50 சென்ட் பரப்பளவில் நிறுவப்படவுள்ள இந்த மையம், ஆய்வு, கண்காணிப்பு, ஆவணப்படுத்தல் மற்றும் பொதுமக்கள் விளக்கத்திற்கான தனிப்பட்ட மையமாக செயல்படும். மேம்பட்ட அறிவியல் கருவிகளை, தொடர்பாடல் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுடன் ஒருங்கிணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த நிலையம், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சேவை செய்து, பாதுகாப்பு அறிவியல் மற்றும் சமூகத்திற்கிடையேயான தொடர்பை வலுப்படுத்தும்.’நீலகிரி வரையாடு திட்டத்தின்’ மூலம், தமிழ்நாடு அரசு மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலியல் ஒருமைப்பாட்டை மீட்டெடுத்து, அதன் அடையாளமான மலைவாழ் உயிரினத்தின் எதிர்காலத்தை பாதுகாக்க, நீண்டகால ஆதார அடிப்படையிலான அணுகுமுறையை முன்னெடுத்து வருகிறது.

டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருது

டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தனது வாழ்நாள் முழுவதும் வனவிலங்குகளின் நலனிற்காக ஆற்றிய சிறப்பான சேவைகள் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பிற்கான குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைப் பாராட்டி அன்னாரின் மறைவிற்குப் பிந்தைய கௌரவமாக முதன் முறையாக 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருதினை மறைந்த டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மகனிடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.வன உயிரின பாதுகாப்பிற்கு சிறந்த பங்களிப்பு செய்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருதை நிறுவியுள்ளது. இவ்விருதானது பாராட்டுச் சான்றிதழுடன் கூடிய 25 இலட்சம் ரூபாய் பரிசுத்தொகை, வன உயிரின பாதுகாப்பில் சிறப்பான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் இந்திய குடிமகன் அல்லது நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்படும்.

நாட்டின் அறிவியல் அடிப்படையிலான வனவிலங்கு மேலாண்மைக்கான அடித்தளம் வித்திட்ட இந்தியாவின் சிறந்த வனவிலங்கு உயிரியல் நிபுணர்களில் ஒருவரான மறைந்த டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் அவர்களின் நினைவாக இவ்விருது நிறுவப்பட்டுள்ளது. டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வனவிலங்கு நலன், யானைகள் பாதுகாப்பு மேலாண்மை மற்றும் கால்நடை மருத்துவம் ஆகியவற்றில் அன்னார் ஆற்றிய சிறந்த வாழ்நாள் சேவையை கௌரவிக்கும் விதமாக, இவ்விருதின் தொடக்க ஆண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவர், இந்தியாவின் முன்னணி வனவிலங்கு கால்நடை மருத்துவர்களில் ஒருவராகவும், யானைகளின் அறிவியல் அடிப்படையிலான மேலாண்மையில் முன்னோடியாகவும் விளங்கினார்.

“இந்தியாவின் யானை மருத்துவர்” எனப் பரவலாக அறியப்பட்ட அவர், முதுமலை மற்றும் ஆனைமலை பகுதிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். வனத்துறையின் கால்நடை மருத்துவத்தில் அவசர நடவடிக்கைகளை வலுப்படுத்தியதுடன், மனித-யானை மோதல்களில் ஈடுபட்ட காயமடைந்த யானைகளை பாதுகாப்பாக கையாளுதல், சிகிச்சையளித்தல் மற்றும் மேலாண்மை செய்தல் ஆகியவற்றில் முக்கிய பங்களிப்பை வழங்கியதுடன், இது தொடர்பான சிறந்த நடைமுறைகளை வகுப்பதிலும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் பங்கு ஈவுத்தொகை வழங்குதல்

தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் இடைக்கால பங்கு ஈவுத் தொகையான 10 கோடி ரூபாய்க்கான வங்கி வரைவோலையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் திரு. நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி.சுப்ரியா சாகு, இ.ஆ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறைத் தலைவர்) திரு. ஸ்ரீனிவாஸ் ஆர். ரெட்டி, இ.வ.ப., முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரின காப்பாளர் திரு. ராகேஷ் குமார் டோக்ரா, இ.வ.ப., தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் தலைமை இயக்குநர் திரு. தீபக் எஸ். பில்கி, இ.வ.ப., தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் தலைவர் / மேலாண்மை இயக்குநர் திருமதி கருணப்பிரியா, இ.வ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: