வளைகுடா நாடுகளில் பணிபுரிந்து வரும் 1 கோடி இந்தியர்களை மீட்கும் பணி தொடக்கம்: ஒன்றிய அரசு அதிரடி அறிவிப்பு

புதுடெல்லி: வளைகுடாவில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 1 கோடி இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 லட்சம் பேரும், பஹ்ரைனில் 3.47 லட்சம் பேரும் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அங்கு செல்போன் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.

ஈரானில் சிக்கியுள்ள சுமார் 10,000 இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. டெஹ்ரான், சிராஸ் மற்றும் யாஸ்ட் நகரங்களில் பயிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அர்மேனியா வழியாகத் தரைவழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வரும் நிலையில், அவர்கள் லேப்டாப் உள்ளிட்ட உடமைகளுடன் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் வளைகுடா நாடுகளில் நிலவும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வான்வழிப் போக்குவரத்து சீரானதும், சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வளைகுடாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீண்டும் அழைத்து வருவதற்கு மையம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் ஒன்றிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

அவர் ேமலும் கூறுகையில்,‘‘உலகின் எந்த மூலையிலும் இந்தியர்கள் துன்பத்தை எதிர்கொள்ளும் போதெல்லாம், ஒன்றிய அரசு அவர்கள் பாதுகாப்பாக திரும்புவதை உறுதி செய்துள்ளது. எனவே யாரும் பீதி அடையத் தேவையில்லை’’ என்றார்.

சவுதி இளவரசர், பஹ்ரைன் மன்னருடன் பிரதமர் மோடி பேச்சு
பிரதமர் மோடி போர் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடமும், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடனும் பேசினார். அதை தொடர்ந்து பஹ்ரைன் மன்னர் ஹமத் பின் இசா அல் கலீபா மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி, ‘ வளைகுடா பகுதியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பது மிகவும் முக்கியமானது. இந்த கடினமான காலங்களில் அங்கு வாழும் இந்திய சமூகத்தின் நல்வாழ்வைக் கவனித்ததற்காக நன்றி’ என்று தெரிவித்தார்.

மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில நிர்வாகங்களுக்கு ஒன்றிய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வெளிநாட்டில் நடக்கும் இத்தகைய மோதல்கள் காரணமாக இந்தியாவில் மத ரீதியான வன்முறைகள் உருவாகாமல் தடுக்க கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, மத வழிபாட்டுத் தலங்களில் ஆக்ரோஷமான பேச்சுகள் மூலம் வன்முறையைத் தூண்டும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்களின் செயல்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய பங்கு சந்தை வீழ்ச்சி: ரூ.6 லட்சம் கோடி இழப்பு
வளைகுடா பதற்றம் காரணமாக இந்திய பங்கு சந்தைகள் நேற்று கடும் சரிவுடன் துவங்கின. 30 பங்குகளை கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் 1,048.34 புள்ளிகள் குறைந்து 80,238.85 புள்ளிகளில் முடிவடைந்தது. நாள் முழுவதும் விற்பனை அழுத்தம் அதிகரித்த நிலையில், சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 2,743.46 புள்ளிகள் சரிந்து 78,543.73 வரை வீழ்ந்தது. அதேபோல், நிஃப்டி 50 குறியீடு 312.95 புள்ளிகள் இழந்து 24,865.70 புள்ளிகளில் நிறைவடைந்தது. பங்கு சந்தையில் ஏற்பட்ட இந்த வீழ்ச்சியால், முதலீட்டாளர்களுக்கு ரூ. 6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

  • ஈரானில் மட்டும் சுமார் 10,000 இந்திய குடிமக்கள் உள்ளனர். அதே நேரத்தில் 40,000 க்கும் மேற்பட்டோர் இஸ்ரேலில் வசிக்கின்றனர்.
  • தற்போது ​​மேற்கு ஆசியாவின் வான்வெளி கிட்டத்தட்ட மூடப்பட்டுள்ளது. நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய், தோஹா மற்றும் பிற முக்கிய மைய விமான நிலையங்களில் சிக்கித் தவிக்கின்றனர்.

ஈரான் அணுசக்தி மையம் மீது தாக்குதல்?
சர்வதேச அணுசக்தி மையத்திற்கான ஈரான் தூதர் ரெசா நஜாபி நேற்று அளித்த பேட்டியில், ‘‘ மீண்டும் அவர்கள் (அமெரிக்கா-இஸ்ரேல்) ஈரானின் அமைதியான பாதுகாக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களை தாக்கினர். ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குகிறது என அவர்கள் கூறுவது வெறும் பொய்’’ என்றார். ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 220 கிமீ தொலைவில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையம் தாக்கப்பட்டதாக நஜாபி கூறி உள்ளார். பூமிக்கு அடியில் அமைந்துள்ள இந்த அணு சக்தி மையத்தில்தான் அதிகபட்சமான யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இத்தகவலை ஐநாவின் சர்வதேச அணுசக்தி மையம் மறுத்துள்ளது. சர்வதேச அணுசக்தி மைய தலைவர் ரபேல் க்ரோஸி கூறுகையில், ‘‘ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேலின் தாக்குதலில் இதுவரை எந்த அணுசக்தி நிலையங்களும் தாக்கப்பட்டதற்கான அல்லது சேமதமடைந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுதொடர்பாக ஈரான் அணுசக்தி அதிகாரிகளை தொடர்பு கொள்ள முடியவில்லை’’ என்றார்.

ஹிஸ்புல்லாவுக்கு பெலனான் தடை
ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேலுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ நடவடிக்கைகளுக்கு லெபனான் பிரதமர் நவாப் சலாம் நேற்று தடை விதித்தார். அவர் அளித்த பேட்டியில், ‘‘ஹிஸ்புல்லாவின் ராணுவ நடவடிக்கைகளை தடை செய்கிறோம். அந்த அமைப்பின் ராணுவ நடவடிக்கைகள் சட்டவிரோத செயல். எனவே ஹிஸ்புல்லா தனது ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும். இஸ்ரேலுடன் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தையை லெபனான் மீண்டும் தொடங்கும்’’ என்றார்.

தற்காலிக பாதுகாப்பு அமைச்சர் நியமனம்
ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அமிர் நசிர்ஜதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட நிலையில், அந்நாட்டின் தற்காலிக பாதுகாப்பு அமைச்சராக மஜித் எப்னெல்ரேசா நேற்று நியமிக்கப்பட்டார்.

அமெரிக்காவின் சக்திவாய்ந்த எப்-15 விமானங்கள் குவைத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டதால் பரபரப்பு
அமெரிக்காவின் விமானப்படை தளம் இருப்பதால் குவைத், பக்ரைன், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது ஈரான் ஏவுகணை மற்றும் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. அந்நாடுகளும் வான் பாதுகாப்பு அமைப்புகளை கொண்டு அவற்றை வானிலேயே தகர்த்து வருகின்றன. இந்நிலையில், குவைத்தில் நேற்று அமெரிக்காவின் எப்-15 போர் விமானம் ஒன்று வானில் சுட்டு வீழ்த்தப்பட்டு அமெரிக்க தூதரக அலுவலகம் அருகே விழுந்த வீடியோ காட்சிகளை ஈரான் ஊடகங்கள் வெளியிட்டன. குவைத்தில் சில அமெரிக்க விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக குவைத் பாதுகாப்பு அமைச்சகமும் உறுதிபடுத்தியது. அமெரிக்காவின் மிக சக்திவாய்ந்ததாக கருதப்படும் எப்-15 போர் விமானங்களை ஈரானின் டிரோன்களே வீழ்த்தி விட்டதா என பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க ராணுவம் வெளியிட்ட விளக்கத்தில், ‘‘குவைத்தில் போர் நடவடிக்கையின் போது அமெரிக்காவின் 3 எப்-15இ ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானங்கள் தவறுதலாக சுடப்பட்டுள்ளன. குவைத் வான் பாதுகாப்பு படைகளால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனாலும் விமானத்தில் இருந்த 6 அமெரிக்க வீரர்களும் பாதுகாப்பு பாராசூட் மூலம் பத்திரமாக தரையிறங்கி உள்ளனர். இந்த சம்பவத்தை குவைத் ஒப்புக்கொண்டுள்ளது. குவைத் பாதுகாப்புப் படைகளின் முயற்சிகளுக்கும் இந்த தொடர்ச்சியான நடவடிக்கையில் அவர்களின் ஆதரவிற்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்’’ என கூறப்பட்டுள்ளது.

சைப்ரஸில் இங்கிலாந்து விமான தளம் தாக்குதல்
சிரியா அருகே மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரசில் இங்கிலாந்தின் அக்ரோட்டிரி விமானப்படை தளம் அமைந்துள்ளது. இந்த விமானப்படை தளத்தின் மீது ஈரான் நேற்று டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் விமானப்படை தளத்தின் ஓடுபாதை சேதமடைந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து, லண்டனில் இருந்து 116 கிமீ தொலைவில் உள்ள குளோசெஸ்டர்ஷையர் மற்றும் இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா ஆகிய தனது விமானப்படை தளங்களை அமெரிக்கா குறிப்பிட்ட சில பயன்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிப்பதாக இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மர் நேற்று அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் இந்த ராணுவ தளங்களை பயன்படுத்த ஸ்டார்மர் மறுத்த நிலையில் அது மிகவும் அதிருப்தி அளித்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று தெரிவித்தார்.

3 லட்சம் பயணிகள் தவிப்பு
ஈரான் போர் காரணமாக வளைகுடா நாடுகளில் 3வது நாளாக நேற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் வான்வெளி மூடப்பட்டுள்ளது. துபாய் சர்வதேச விமானம், ஹமாத் சர்வதேச விமான நிலையம், சார்ஜா சர்வதேச விமானம் நிலையம், குவைத் சர்வதேச விமான நிலையம், பக்ரைன் சர்வதேச விமான நிலையம், துபாய் வேர்ல்டு சென்ட்ரல் விமான நிலையம் உள்ளிட்ட மத்திய கிழக்கின் முக்கிய விமான நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இதனால், 3,400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு, 3 லட்சம் பயணிகள் தவித்து வருகின்றனர். இந்தியாவில் இருந்து அபுதாபி, தோகா, ஜெட்டா, குவைத், ரியாத் உள்ளிட்ட அரபுகளுக்கு செல்லும் ஆகாசா ஏர் ஏர்லைன்ஸ் விமானங்கள் இன்று வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் பேச மறுத்து விட்டது ஈரான்
ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீண்டும் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை தொடங்க ஒப்புக் கொண்டதாகவும் அதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இத்தகவலை ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் அலி லரிஜனி நேற்று மறுத்தார். ஆனால், இதன் பிறகும் ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக டிரம்ப் நேற்று மீண்டும் கூறி உள்ளார்.

கமேனி மனைவி பலி
இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் கமேனியுடன் அவரது மகள், மருமகன், பேத்தி ஆகியோர் பலியான நிலையில், கமேனியின் மனைவி மன்சவுரே கோஜஸ்தே(78) படுகாயமடைந்து கோமா நிலைக்கு சென்றார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்ததாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானில் 555 பேர் பலி

  • அமெரிக்கா-இஸ்ரேலின் கூட்டு தாக்குதலில், முதல் 2 நாளில், ஈரானில் 555 பேர் பலியாகி இருப்பதாக ஈரானிய ரெட் கிரசண்ட் தெரிவித்துள்ளது. 131 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
  •  ஈரானின் பதில் தாக்குதலில் பலியானவர்கள்: குவைத் – ஒருவர் பலி, 32 பேர் காயம்,,பக்ரைன் – ஒருவர் பலி, 4 பேர் காயம், கத்தார் – 16 பேர் காயம், யுஏஇ – 3 பேர் பலி, 58 பேர் காயம், ஓமன் – 5 பேர் காயம், இஸ்ரேல் – 10 பேர் பலி, 100க்கும் மேற்பட்டோர் காயம், ஈராக் – 5 பேர் காயம்.
  • சவுதி அரேபியா, ஜோர்டான், சைப்ரஸ் நாடுகளில் நடத்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.
  • அமெரிக்க ராணுவ சேவைப்பிரிவைச் சேர்ந்த 3 பேர் பலி, 5 பேர் காயம்
  • லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 31 பேர் பலி, 150 பேர் காயம்.

Related Stories: