புதுடெல்லி: உயர்கல்வியில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கு 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த தூதர்கள், உயர் ஆணையர்கள், தூதரக பணிகளின் பிரதிநிதிகள் மற்றும் அமைச்சக அதிகாரிகள் பங்கேற்ற இந்தியாவில் கல்வி-ராஜதந்திர மாநாடு 2026 டெல்லியில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு பேசியதாவது, ‘‘உலகப் பொருளாதார நிலப்பரப்பில் இந்தியா கற்றுக்கொள்வதற்கு, ஆராய்ச்சி செய்வதற்கு, புதுமைப்படுத்த மற்றும் செயல்படுத்த மகத்தான வாய்ப்புகளை வழங்குகின்றது. இந்தியாவின் மிகப்பெரிய பலம் அதன் துடிப்பான அறிவு சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் வேகமாக வளரும் பொருளாதாரம். செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில்நுட்பம், குறைக்கடத்திகள் முதல் நிலையான ஆற்றல் வரை இந்தியா ஒரு நம்பகமான கண்டுபிடிப்பு பங்குதாரராக உருவாகி வருகின்றது.
இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் புதுமை சார்ந்த பல்துறை மற்றும் அணுகல் நட்பு கல்வி முறையுடன் ஒத்துழைப்பதற்கு வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். நடப்பு கல்வியாண்டில் 19 வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் கால் பதிக்க உள்ளன. அந்த பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் தங்கள் வளாகங்களை திறக்க உள்ளார்கள்” என்றார்.
