ஏஐ உருவாக்கிய போலி தீர்ப்புகளை வைத்து விசாரணை நீதிமன்றங்கள் உத்தரவிடுவது தவறு: உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி தீர்ப்புகளை வைத்து கீழ்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா மற்றும் அலோக் ஆராதே ஆகியோர் அடங்கிய அமர்வு கூறுகையில், “வழக்கறிஞர்கள் செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்தி உண்மையல்லாத தீர்ப்பு விவரங்களை மனுக்களில் குறிப்பிட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், விசாரணை நீதிமன்றங்கள் அத்தகைய போலியான தீர்ப்புகளை சரி பார்க்காமல் அதை ஏற்று கொண்டு வழக்குகளை முடித்து வைத்துள்ளனர்.

நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தாங்கள் சமர்ப்பிக்கும் ஆதராங்களை சரி பார்க்க வேண்டும். செயற்கை நுண்ணறிவை முழுமையாக நம்பக்கூடாது. இதுபோன்ற செயல்கள் தொழில்முறையில் கடமை தவறுவதாக கருதப்படும். இது தீர்ப்பளிக்கும் செயல்முறையின் நேர்மையை நேரடியாக பாதிக்கிறது. இத்தைகய செயல்கள் வெறும் பிழையன்று, அது தவறான நடத்தை” என காட்டமாக தெரிவித்தது.

இந்த சம்பவம் குறித்து விரிவாக ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: