கோபால்கஞ்ச்: பீகாரில் புதிதாக கட்டப்படும் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டம் சித்வாலியா தொகுதியில் உள்ள கோக்ஹாரி ஆற்றின் மீது மாநில அரசின் ஊரக பணித்துறை மூலம் சிறிய அளவிலான பாலம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலத்தின் ஒருபகுதி கடந்த பிப்ரவரி 28ம் தேதி இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சம்பவ இடத்தில் கோபால்கஞ்ச் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் சினஹா நேரில் ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் பால கட்டுமான பணியை மேற்கொண்டு வரும் உதவி பொறியாளர், ஊரக பணித்துறையின் இளநிலை பொறியாளர் ஆகியோரின் மேற்பார்வை பணிகளின் அலட்சியம் காரணமாகவே விபத்து நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
