புதுடெல்லி: ஈரானில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனையில் ஈடுபட்டார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நடத்திய கூட்டு ஏவுகணைத் தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி மற்றும் மூத்த அதிகாரிகள் பலர் கொல்லப்பட்டனர். ஈரானிடம் அணு ஆயுதங்கள் சேருவதைத் தடுக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதற்குப் பதிலடியாக ஈரான் தரப்பிலிருந்து இஸ்ரேல், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், கத்தார், ஜோர்டான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது சரமாரியாக ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் வளைகுடா நாடுகளில் போர் தீவிரமடைந்துள்ளது.
ஈரானின் பதிலடி தாக்குதலால் வளைகுடா நாடுகள் முழுவதும் ஏவுகணைகள் பாய்ந்து வரும் நிலையில், அங்கு வசிக்கும் சுமார் 90 லட்சம் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ஒன்றிய அரசு கவலை தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் 39 லட்சம் இந்தியர்களும், சவுதி அரேபியாவில் 27.5 லட்சம் பேரும், குவைத்தில் 10.1 லட்சம் பேரும், கத்தாரில் 8.3 லட்சம் பேரும், ஓமனில் 6.62 லட்சம் பேரும், பஹ்ரைனில் 3.47 லட்சம் பேரும் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஈரானில் சுமார் 10,000 இந்தியர்கள் உள்ள நிலையில், அங்கு செல்போன் மற்றும் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் அவர்களைத் தொடர்பு கொள்வதில் சிக்கல் நீடிக்கிறது.
ஈரானில் சிக்கியுள்ள சுமார் 1,200 இந்திய மாணவர்களை மீட்க ஒன்றிய அரசு நடவடிக்கையை இன்று தொடங்கியுள்ளது. டெஹ்ரான், சிராஸ் மற்றும் யாஸ்ட் நகரங்களில் பயிலும் காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் அர்மேனியா வழியாகத் தரைவழியாக மீட்கப்பட்டு வருகின்றனர். துபாய் மற்றும் அபுதாபி விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான இந்தியப் பயணிகள் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து வரும் நிலையில், அவர்கள் லேப்டாப் உள்ளிட்ட உடமைகளுடன் பாதுகாப்பாகத் தங்குவதற்கு இந்தியத் தூதரகங்கள் ஏற்பாடு செய்துள்ளன. வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு மாநிலத் தலைவர்கள் பிரதமருக்கு அவசரக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துவிட்டு நேற்றிரவு டெல்லி திரும்பிய பிரதமர் மோடி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஒன்றிய அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடந்த இந்த ஆலோசனையில், வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் வளைகுடா நாடுகளில் நிலவும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரவும், அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், வான்வழிப் போக்குவரத்து சீரானதும், சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான சிறப்பு விமானங்களை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் பேசிய பிரதமர், ‘மேற்கு ஆசியாவில் நிலவும் அசாதாரண சூழலில் இந்தியர்களின் பாதுகாப்பிற்கே முதலிடம் அளிக்கப்படும்; அவர்களைப் பாதுகாப்பாகத் தாயகம் அழைத்து வரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்படும்’ என்று உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து டெஹ்ரான், அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இடங்களில் 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும், வளைகுடா பகுதியில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியா வரும் சர்வதேச விமானங்களின் பாதைகள் மாற்றியமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே ‘ஆபரேஷன் சிந்து’ என்ற தலைப்பில் ஈரான் போன்ற நாடுகளில் தவித்த இந்தியர்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல், சவுதி தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சு;
பிரதமர் மோடி நேற்றிரவு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொலைபேசி மூலம் பேசி பிராந்தியத்தில் நிலவும் போர் சூழல் குறித்து தனது ஆழ்ந்த கவலையை தெரிவித்தார். இந்தப் பேச்சின் போது, ‘தற்போதைய நெருக்கடியான சூழலில் அப்பாவி பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அமைதியை நிலைநாட்ட முன்வர வேண்டும்’ என்று பிரதமர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானுடன் பேசிய பிரதமர், அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பிற்கு தனது நன்றியையும் தெரிவித்தார். மேலும், வளைகுடா பகுதியில் நிலவும் இந்த பிரச்னை முடிவுக்கு வந்து அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை திரும்ப இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அவர் உறுதி அளித்தார்.
காங்கிரஸ் கண்டனம்;
ஈரான் உச்ச தலைவர் கமேனியின் படுகொலை குறித்து காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஐக்கிய நாடுகள் சபையின் விதிகளுக்குப் புறம்பாக ஒரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதும், வன்முறையை ஏவுவதும் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. உலகம் ஒரு குடும்பம் என்ற தத்துவம் மற்றும் அணிசேராக் கொள்கையின் அடிப்படையில் அமைதி வழியில் பிரச்னைகளைத் தீர்க்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
