சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் திமுக தரப்பில் பலமான கூட்டணி அமைக்கப்பட்டு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு, கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிகளுக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகின்றன. அதிமுக தரப்பில் கூட்டணியை ஓரளவு உறுதி செய்துள்ள நிலையிலும் கூட, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையே நடக்காமல் இருந்தது. அதிமுக தலைமையில் என்டிஏ கூட்டணி அமைந்தாலும், கூட்டணிக்குள் அன்புமணி பாமக, அமமுக மற்றும் சிறிய கூட்டணி கட்சிகளை கூட்டணிக்கு அழைத்து வந்தது பாஜதான்.
எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்று சொன்னாலும், அதிமுகதான் கூட்டணிக்கு தலைமை என்று சொன்னாலும், கூட்டணி கட்சிகள் எல்லாம் பாஜவிடம்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எடப்பாடி தரப்பில் எந்த கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்தாத நிலையில், கடந்தவாரம் ஒன்றிய வர்த்தக்கத்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் நடைபெறுவதாக இருந்த தொகுதி பங்கீடு குறித்த கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளுக்கும் நாங்களே தொகுதிகளை பங்கிட்டு கொடுக்கிறோம். நீங்கள் மொத்தமாக தொகுதிகளை எங்களுக்கு கொடுங்கள் என பாஜ கேட்டு வருகிறது. இச்சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த ஒன்றிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று காலை மதுரை சுற்றுச்சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தொகுதி பங்கீடு குறித்து, ஆலோசனை நடத்தினார்.
அதில் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி, நயினார் நாகேந்திரன், அன்புமணி, டிடிவி.தினகரன், ஜி.கே.வாசன், ஏசி.சண்முகம், பாரிவேந்தர், ஜெகன்மூர்த்தி, ஜான் பாண்டியன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் தீர்க்கமான முடிவு எட்டப்படவில்லை. பிரதமர் மோடி வருகை காரணமாக கூட்டம் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே பேச்சுவார்த்தையில் நீடித்த இழுபறியால் பாதியிலேயே கைவிட்டு விட்டு, அனைவரும் பிரதமரை வரவேற்க பொதுக்கூட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.
பிரதமர் சென்ற பின் விமான நிலையத்தில் மீண்டும் அனைவரும் ஆலோசனை நடத்தினர். இதைத்தொடர்ந்து சிந்தாமணி பகுதி சுற்றுச்சாலை நட்சத்திர ஓட்டலில் மீண்டும் ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஒவ்வொரு கட்சி தலைவருடன் பியூஸ் கோயல் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் சென்ற பிறகு தனி விமானத்தில் டெல்லி செல்ல இருந்த பியூஸ் கோயல், தொகுதி பங்கீடு இழுபறி காரணமாக ரத்து செய்துவிட்டு, இரவு வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஆனால், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், நேற்றிரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் மதுரையில் இருந்து சென்னைக்கு எடப்பாடி புறப்பட்டார். கூட்டம் தொடர்பாக பேட்டியளித்த பியூஸ் கோயல், ‘தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தேர்தல் வெற்றி குறித்து ஆலோசனை நடத்தினோம்’ என்றார். பிரதமர் மோடி வருகைக்கு முன்பே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், மோடி 2 முறை தமிழகம் வந்தும் இன்னும் இறுதியாகாததால் எடப்பாடி மீது அமித்ஷா கடும் கோபத்தில் உள்ளார்.
வழக்கமாக கூட்டணி தலைமை வகிக்கும் கட்சிதான் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தும். திமுக கூட்டணியில் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு செய்து வருகிறது. ஆனால், என்டிஏ கூட்டணியில் தலைமையை டம்மியாக்கிவிட்டு, பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது, அதிமுகவினரை அதிர்ச்சியடைய செய்து உள்ளது.
* டிடிவி – ராஜேந்திரபாலாஜி ஆதரவாளர்கள் கடும் மோதல்
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் பிரசார பொதுக்கூட்டம் முடிந்து, வாகனங்களில் அதிமுக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பல்வேறு வாகனங்களில் நேற்றிரவு வெளியேறினர். சிந்தாமணி சந்திப்பு அருகே டிடிவி.தினகரன் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள், டிடிவி.தினகரனுக்கு முன்பாக கார்களில் சென்றனர்.
டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் வாகனங்கள் ஹார்ன் அடித்து வழி விடுமாறு கேட்டனர். ஆனால் அவர்கள் வழி விட மறுத்து தொடர்ந்து ரோட்டை மறித்துச் சென்றதாக தெரிகிறது. இதனால் டிடிவி.தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னேறி செல்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கார்களை நிறுத்தி இறங்கிய ராஜேந்திர பாலாஜி ஆதரவாளர்களுக்கும், டிடிவி.தினகரன் ஆதரவாளர்களுக்கும் மோதல், கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஒருவரது மண்டை உடைந்தது.
