சொன்னாரு: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
செஞ்சாரு: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் இலவச மிதிவண்டி திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கொரோனா நோய்த்தொற்று காலத்தில் 2 ஆண்டுகளாக மிதிவண்டி விநியோகம் தடைப்பட்டிருந்த நிலையில் நிலுவையில் இருந்த மாணவர்களுக்கும், 2021-22 கல்வியாண்டு மாணவர்களுக்கும் மிதிவண்டிகள் விநியோகிக்கப்பட்டன.
2022ல் இத்திட்டம் தொடங்கப்பட்ட போது 6.35 லட்சம் மாணவர்களுக்கு ரூ.323 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் தாக்கத்தால் கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறப் பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு இது வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் 10ம் வகுப்பிற்கு பிறகு மாணவர்கள் உயர்கல்வியை தொடர்வதற்கு இத்திட்டம் ஒரு முக்கிய ஊக்கக்காரணியாக உள்ளது.
இதுமட்டுமின்றி, ஏழை எளிய குடும்பங்களுக்கு ரூ.5,000 வரையிலான ஒரு செலவினத்தை அரசு ஏற்றுக்கொள்வது பெரும் உதவியாக உள்ளது. பள்ளி மாணவர்களின் இடைநிற்றலை தடுத்து, கல்வி கற்கும் ஆர்வத்தை ஊக்குவிப்பதில் இலவச மிதிவண்டி திட்டம் முதுகெலும்பாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
* மின்சார மிதிவண்டிகள்?
2026 தேர்தலை முன்னிட்டு, ‘manifesto portal 2026” என்ற இணையதளத்தைத் திமுக தொடங்கியுள்ளது. இதன் மூலம் மிதிவண்டி திட்டம் போன்ற மாணவர் நலத்திட்டங்களில் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளை (எடுத்துக்காட்டாக, தரத்தை உயர்த்துதல் அல்லது மின்சார மிதிவண்டிகள்) வழங்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
