பெரியார் உருவபடம் நீக்கத்தை தொடர்ந்து மோடி இரட்டை விரல் காட்டும் படமும் அகற்றம்: கை கட்டி வேடிக்கை பார்த்த அதிமுக

பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பங்கேற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் மதுரை மண்டேலா நகரில் நேற்று நடந்தது. பொதுக்கூட்ட நுழைவாயில் முகப்பில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இதனை பார்வையிட்ட தமிழ்நாடு பாஜ தேர்தல் பொறுப்பாளரும், ஒன்றிய அமைச்சருமான பியூஷ் கோயல், பெரியார் படத்தை அகற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து பெரியார் படம் உடனடியாக அகற்றப்பட்டது. அப்போது உடனிருந்த அதிமுக மாஜி அமைச்சர்கள் வேலுமணி, உதயகுமார், செல்லூர் ராஜூ ஆகியோர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது தமிழக மக்கள், அரசியல் கட்சியினரிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பரபரப்பு ஓயும் முன்பு அடுத்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. பொதுக்கூட்ட மேடையின் இடதுபுறத்தில் திருப்பரங்குன்றம் கோயில் கோபுரத்தின் மலை பின்னணியில் இரட்டை விரல் காட்டிய நிலையில் பிரதமர் மோடியின் படம் வைக்கப்பட்டிருந்தது.

வலதுபுறம் மீனாட்சியம்மன் கோயில் கோபுர பின்னணியில் எடப்பாடி பழனிசாமி இரட்டை விரல் காட்டும் வகையிலான படமும் வைக்கப்பட்டிருந்தது. மோடி இரட்டை விரல் காட்டும் படம் நேற்று காலையில் திடீரென அவசரம் அவசரமாக அகற்றப்பட்டது. அதற்கு பதிலாக திருப்பரங்குன்றம் கோபுரத்துடன் மலைப்பகுதி பின்னணியில் பிரதமர் மோடி கும்பிடுவது போல பேனர் அதிரடியாக மாற்றப்பட்டது.

இதற்கு அதிமுகவினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் கை கட்டி வேடிக்கை மட்டும் பார்த்தனர். அதிமுகவின் கொள்கை தலைவராக போற்றப்படும் பெரியார் படத்தை அகற்றியது ஒருபுறம் என்றால், அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை குறிப்பது போல மோடி காட்சியளித்த படத்தையும் அகற்ற உத்தரவிட்டது, தேஜ கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

* பெரியார் படத்தை அகற்றியது ஏன்? தமிழிசை விளக்கம்
பெரியார் படத்தை அகற்றியது ஏன் என மதுரையில் நேற்று பாஜ மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் நிருபர்கள் கேட்டபோது, ‘‘மதுரை பொதுக்கூட்ட முகப்பில் பெரியார் படம் அகற்றியது ஏன் என்கிறீர்கள். அந்த இடத்தில் எந்த படம் இருக்க வேண்டும் என்பது கூட்டம் நடத்துபவர்களின் உரிமை. இந்த இடத்தில் இந்த படம் இருக்க வேண்டும் என நினைப்பதே கூட்டம் நடத்துபவருடைய விருப்பம்தான். அது அவரவர் கொள்கை.

எந்த கொள்கையை முன்னெடுத்து செல்கிறோமோ, அந்த கொள்கைக்கு மாறுபட்டிருக்கும் தலைவர்கள் படம் அங்கு இருக்கலாமா என யோசனை செய்தனர். அவ்வளவுதான். அந்த கூட்டம் நடத்துபவர்களின் கொள்கை என்னவோ, அவர்கள் எந்த கொள்கையை பின்பற்றுகிறார்களோ, அந்த வகையில்தான் பெரியார் படத்தை அகற்றியுள்ளனர்’’ என்றார்.

Related Stories: