திமுகவில் இணைந்த பின் முதன்முறையாக சொந்த ஊரான பெரியகுளம் செல்வதற்காக, ஓ.பன்னீர்செல்வம், நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். விமானநிலையத்தில் அவருக்கு திமுக கூட்டணி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன்பிறப்புகளை மட்டுமல்லாது, தமிழகத்தின் அனைத்து தரப்பட்ட மக்களையும் சம நோக்குடன் வழி நடத்திக்கொண்டிருக்கிறார். திமுகவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் இணைந்துள்ளேன்.
திமுகவில் உள்ள அனைத்து நண்பர்களும், சகோதரர்களும், என்னை தங்களின் உடன்பிறந்த சகோதரனைப் போல பாவித்து நல்ல வரவேற்பு அளித்தனர்’’ என்றார். அப்போது நிருபர்கள், ‘‘என்னென்ன கோரிக்கைகள் வைத்து இணைந்துள்ளீர்கள்? போட்டியிட உங்களுக்கும், உங்களுடன் வந்தவர்களுக்கும் சீட் கேட்டீர்களா?’’ என கேட்க, ‘‘நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நினைக்கிறாரோ, என்ன கட்டளையிடுகிறாரோ அதன்படிதான் நாங்கள் நடப்போம்.
நான் திமுகவில் இணைந்துள்ளதால், மு.க.ஸ்டாலின் படத்தை காரில் வைப்பது தவறில்லை. அதிமுக கூட்டணி தேர்தலில் படுதோல்வி அடையும். தேஜ கூட்டணி எத்தனை பேருடன் கூட்டணி போட்டாலும், வரும் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடையும்’’ என்றார். ‘‘மதுரை தேஜ கூட்டணி பொதுக்கூட்டத்தில் பெரியார் படம் அகற்றப்பட்டுள்ளதே’’ என்ற கேள்விக்கு, ‘‘அடித்தள ஏழை, ஏளிய மக்கள் சமநோக்குடன் வாழ வேண்டுமென தன்னையே கொடுத்த தலைவர் பெரியார். அவரது படத்தை அகற்றியது மிகப்பெரும் கண்டனத்திற்குரியது’’ என்றார்.
