திருப்பரங்குன்றத்தில் வெண் பட்டு துணி மீது விழுந்து பிரதமர் மோடி ‘சாஷ்டாங்க’ தரிசனம்

மதுரை விமான நிலைய வளாகத்தில் நடந்த அரசு விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்ய நேற்று மாலை 4.10 மணிக்கு வருகை தந்தார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் பட்டு வஸ்திரம், மாலை அணிவித்து சிவப்பு கம்பள வரவேற்புடன் கோயில் சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை அளித்தனர். மங்கள இசை முழங்க பிரதர் மோடியை கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். மூலவர் சன்னதியில் போய் கருவறையின் சுப்பிரமணிய சாமியை தரிசனம் செய்தார்.

துர்க்கை அம்மன், கற்பக விநாயகர், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாளையும் பிரதமர் தரிசனம் செய்தார். அங்கிருந்து திரும்பியதும் கம்பத்தடி மண்டபத்தில் கொடிமரம் அருகில் பக்தர்கள் விழுந்து கும்பிடும் இடத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து வழிபாடு செய்தார். அவர் விழுந்து கும்பிடும் இடத்தில் சிவப்புக் கம்பளம் மீது வெண் பட்டாலான துணி விரிக்கப்பட்டிருந்தது. இதன் மீதே விழுந்து கும்பிட்டு எழுந்தார்.

பின்னர் பிரதமரை கம்பத்தடி மண்டபம் அருகே சிம்மாசனத்தில் அமர வைத்து சிறப்பு மரியாதை செய்யப்பட்டு, பிரசாதமும், மூலவர் சுப்பிரமணிய சுவாமி – தெய்வானை திருமண கோலத்தில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்றும் வழங்கப்பட்டது. பிரதமரின் வருகையையொட்டி திருப்பரங்குன்றம் நகர் முழுவதும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனால் நேற்று பகல் 12 மணிக்கே கோயில் நடை சாத்தப்பட்டது. அருகில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. பிரதமர் மோடி கோயிலுக்குள் உள்ள படிக்கட்டுகளை எளிதாக கடந்து செல்வதற்காக நடைமேடை, உயரமான படிக்கட்டுகளை பலகைகள் மூலம் இரண்டு படிக்கட்டுகளாக மாற்றி 150 மீட்டர் நீளம் சிவப்பு கம்பளமும் விரிக்கப்பட்டிருந்தது. மோடி வருகையால், சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் அவதிப்பட்டனர்.

* மூலவர் சன்னதியில் தடை மீறி வீடியோ
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலில் மூலவர் சன்னதியில் புகைப்படம் எடுக்கவோ, வீடியோ பதிவிடவோ யாருக்கும் அனுமதியில்லை. ஆனால் பிரதமர் மோடி மூலவர் சன்னதியில் சாமி கும்பிட்டு, நெற்றியில் சிவாச்சாரியார்களிடம் விபூதி பெற்றுக்கொள்கிறார். இந்த காட்சியை பிரதமரின் ஆதரவாளர்கள் பதிவு செய்ததில், மூலவர் சன்னதியில் நிற்கும் போட்டோவும், வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து வைரலானதுடன், இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: