*பறிமுதல் செய்ய போலீஸ் நடவடிக்கை
கூடலூர் : கூடலூரில் கேட்பாரற்ற நீண்ட நாள் நிறுத்திய வாகனங்களுக்கு நோட்டீஸ் ஒட்டி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம் கூடலூர் நகரை ஒட்டிய கள்ளிக்கோட்டை சாலை, மைசூர் சாலை மற்றும் ஊட்டி செல்லும் சாலைகளின் இருபுறமும் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.
இதில், பல வாகனங்கள் கேட்பாரற்று மாதக்கணக்கில் நிறுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையங்களை ஒட்டியும் சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆட்டோக்கள், கார்கள் சிறிய மற்றும் பெரிய சரக்கு வாகனங்களும் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த வாகனங்களை அங்கு இருந்து அப்புறப்படுத்த அதன் உரிமையாளர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில் உள்ளது. இதனால் வாகனங்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்து போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
ஆரம்ப கட்டமாக சாலை ஓரங்களில் கேட்பாரற்ற நிலையில் உள்ள வாகனங்களில் எச்சரிக்கை நோட்டீஸ்களை நேற்று போலீசார் ஒட்டினர். வரும் 25ம் தேதிக்குள் வாகனத்தில் உரிமையாளர்கள் அங்கிருந்து வாகனங்களை எடுத்துச் செல்லாவிட்டால் இந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு போலீசாரால் அங்கிருந்து அப்புறப்படுத்தும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடலூர் போக்குவரத்து உதவி ஆய்வாளர் அருண், தலைமை காவலர் முருகானந்தம் ஆகியோர் தலைமையில் காவலர்கள் திவ்யா மற்றும் வின்சென்ட் ஆகியோர் சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இந்த நோட்டீசுகளை ஒட்டினர்.
