வனப்பகுதியில் கடும் வறட்சி எதிரொலி ரப்பர் தோட்டத்திற்குள் காட்டு யானைகள் முகாம்

*தொழிலாளர்கள் பீதி

பாலக்காடு : கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பாலப்பிள்ளி அருகே சிம்மினி எஸ்டேட் பகுதியில் தண்ணீர் மற்றும் இரை தேடி 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால் ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் அச்சமடைந்தனர். கேரள மாநிலம் உட்பட தென்மாநிலங்களில் தற்போது காலநிலை மாற்றம் ஏற்பட்டு கடுமையான வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளன.

இதனால், வனப்பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருகின்றன. இதன் காரணமாக, வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு வகைகளை தேடியப்படி ஊர்மக்கள் வசிக்கின்ற இடங்களில் புகுந்து அங்கு அவர்கள் பயிர் செய்துள்ள நெல்,வாழை,தென்னை,மரவள்ளி,சேனை மற்றும் ஊடுப்பயிர்களை தின்று தோட்டங்களைச் சேதப்படுத்தி விட்டு செல்கின்றன.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு 30க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டியுடன் இடம் பெயர்ந்து பாலப்பிள்ளி, சிம்மினி எஸ்டேட் பகுதிகளில் சாலைகளை கடந்தவண்ணம் ரப்பர் தோட்டத்திற்குள் முகாமிட்டன. யானைக் கூட்டத்தை கண்ட தோட்டத்தொழிலாளர்கள் அலறியடித்து ஓடி உயிர் தப்பினர்.

அக்ரப்பாடி, காரிக்குளம் ஆகிய இடங்களில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. மேலும், சிம்மினி டேம் பகுதியில் தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால், ரப்பர் தோட்ட டேப்பிங் தொழிலாளர்கள் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

தகவலறிந்த வனத்துறை காவலர்கள் விரைந்து வந்து காட்டுயானை கூட்டத்தை காட்டிற்குள் விரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டனர். இருப்பினும், அவைகள் சிறிது தூரம் காட்டிற்குள் சென்ற பின் மீண்டும் திரும்பி ஊருக்குள் புகுந்தவண்ணம் உள்ளன.

இதனால், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் பீதியடைந்து வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வனவிலங்கு மனித உயிரிழப்பு தடுக்க வனத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: