வால்பாறை பகுதியில் பூத்துக்குலுங்கும் கோரல் மலர்கள்

வால்பாறை : வால்பாறை மலைச்சாலைகளில் உள்ள வனப்பகுதிகளுக்கு இடையே கோரல் மரங்கள் பூத்துக்குலுங்கி கண்கவர் காட்சியை ஏற்படுத்தியுள்ளன. இலைகள் உதிர்ந்த நிலையில் மரக்கிளைகளில் பூக்கள் மட்டும் அடர்ந்து மலர்ந்திருப்பது இயற்கை ரசனையாளர்களுக்கு கண் விருந்தாக உள்ளது.‘எரித்ரினா லைசிஸ்ட்மோன்’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட இம்மரங்கள் வெளிநாட்டு தாயகத்தைச் சேர்ந்த அலங்கார மரங்களாகும். பொதுவாக பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் வளர்க்கப்படும் இவை, தற்போது வால்பாறை வனப்பகுதிகளிலும் பரவி மலர்ந்து வருகின்றன என கூறப்படுகிறது.

இலைகள் இல்லாத கிளைகளில் சிவப்பு நிறத்தில் குவிந்து மலரும் கோரல் பூக்கள் பலரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தேன்சாறு நிறைந்த இப்பூக்கள் சூரியக்குருவி உள்ளிட்ட பல்வேறு பறவைகள் மற்றும் தேனீக்களை ஈர்க்கும் தன்மை கொண்டதாக இயற்கை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பயறுவகை தாவர குடும்பத்தைச் சேர்ந்த இம்மரங்கள் மண் வளத்தையும் மேம்படுத்தும் பண்புடையதாக கூறப்படுகிறது. பறவைகளுக்கு தங்கும் இடமாக பயன்படும் இம்மரம் பூக்கும் காலம் விவசாயிகளுக்கு விதைப்பு பருவம் தொடங்குவதை சுட்டிக்காட்டும் என பாரம்பரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

வால்பாறை மலைப்பாதையில் கொண்டை ஊசி வளைவுகள் பகுதிகளில் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும் கோரல் பூக்கள் (பவளப்பூக்கள்) சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகின்றன. வழக்கமாக மார்ச் மாதங்களில் பூக்கும் இம்மலர்கள் இந்த ஆண்டு முன்கூட்டியே மலர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories: