தாராபுரத்தில் கழிவுநீரை தூய்மைப்படுத்த ரூ.24 கோடியில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணி தீவிரம்

*பொதுமக்கள் மகிழ்ச்சி

தாராபுரம் : தாராபுரத்தில் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்ய ரூ.24 கோடியில் சுத்திகரிப்பு நிலைய கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி 1912ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது, நூறு ஆண்டுகளை கடந்து இன்றும் நகராட்சியாகவே செயல்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளில் நகரில் வாழும் பொது மக்களின் அத்தியாவசிய தேவைகள், தொகுதி மக்களின் கோரிக்கைகள் அனைத்தும் செயல் வடிவம் கொடுக்கப்பட்டு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

தாராபுரம் தொகுதி மக்களின் 60 ஆண்டு கால கோரிக்கையின் ஒரு பகுதியாக ரூ.12 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ரூ.24 கோடி மதிப்பீட்டில் நவீனவசதிகளுடன் அரசு மருத்துவமனை விரிவுபடுத்தப்பட்டது.தாராபுரம் நகரின் மிக பழமையான ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன்னதாக கட்டப்பட்ட ராஜவாய்க்கால் பாசன கால்வாய் உள்ளது.

இந்த கால்வாய் மூலம் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள், பயன்பெற்று வருகிறது. தற்போது கால்வாயில் கழிவு நீர் கலப்பதால் அப்பகுதி மக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாமல் உள்ளனர். எனவே, ராஜவாய்க்கால் பாசன கால்வாயில் வரும் கழிவு நீரை தூய்மைப்படுத்தி சுத்தமான தண்ணீராக மாற்ற வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நகராட்சி தலைவர் பாப்பு கண்ணன் தலைமையிலான அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ராஜவாய்க்கால் கழிவு நீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தமிழ்நாடு அரசுக்கு 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாசன நீர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்ட வரைவுகள் அனுப்பி இருந்தனர்.

இது குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவின் பேரில் நகராட்சிகளின் நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, மாவட்ட அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் ஆகியோரது பரிந்துரையின்படி சென்னையில் இருந்து உயர்மட்ட அதிகாரிகள் குழுவினர் ஒப்புதலின்படி தமிழ்நாடு அரசு தாராபுரம் நகரின் ராஜவாய்க்கால் பாசன கால்வாய் கழிவு நீரை சுத்திகரிப்பு செய்து பாசன நீராக பயன்படுத்த ரூ.24 கோடி ஒதுக்கீடு செய்து திட்ட பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிடபட்டது.

இதன் தொடர்ச்சியாக, ராஜவாய்க்கால் பாசன நீரில் நகரின் கழிவு நீர் கலப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதை தடுக்க ராஜா வாய்க்கால் பாசன நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் துவங்கப்பட்டு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுமான பணிகள் ரூ.14 கோடியே 51 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி உரக்கிடங்கு வளாகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தாராபுரம் நகரின் ஒட்டுமொத்த கழிவு நீரையும் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வருவதற்கான ராட்சத குழாய்கள் அமைத்து நீர் உந்து மின் மோட்டார் மூலம் நகராட்சி உரக்கிடங்கில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பணி விரைந்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவடைந்தால் தாராபுரம் நகராட்சி உரக்கிடங்கு வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் தினசரி ஒரு கோடி லிட்டர் கழிவு நீர் மறுசுழற்சி செய்யப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்ட சுத்தமான தண்ணீராக மாற்றப்பட்டு ராஜவாய்க்கால் பாசன கால்வாயில் விவசாய பயன்பாட்டிற்காக விடப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 25,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதன் மூலம் தாராபுரம் மக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது.

Related Stories: