மோர்ஸ் கார்டன் சிறுவர் பூங்காவில் ஆபத்தான மரத்தை வெட்டி அகற்ற கோரிக்கை

குன்னூர் : குன்னூர் மோர்ஸ் கார்டன் பகுதியில் அபாயகரமான மரத்தால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். விபத்துகள் ஏற்படும் முன் மரத்தை வெட்டி அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.​நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள மோர்ஸ் கார்டன் பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான சிறுவர் பூங்கா உள்ளது.

இந்தப் பூங்காவின் உட்புறத்தில், ஓட்டுபட்டறை செல்லும் பிரதான சாலையை ஒட்டி ராட்சத மரம் தற்போது மிகவும் பலவீனமடைந்து, சாலையை நோக்கி ஆபத்தான முறையில் சாய்ந்த நிலையில் காணப்படுகிறது.​

ஓட்டுபட்டறை செல்லும் இந்தச்சாலையானது குன்னூரின் மிக முக்கியமான போக்குவரத்து சென்று வர பிரதான சாலைகளில் ஒன்றாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அரசுப் பேருந்துகள் இந்தச் சாலை வழியாகச் சென்று வருகின்றன.

மரம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருப்பதால், அவ்வாறு அசம்பாவிதம் ஏதேனும் நிகழ்ந்தால் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் உள்ளது. ​மரம் விழும் சமயத்தில் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் அல்லது பொதுமக்கள் மீது விழுந்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக, இந்த மரம் நீண்ட நாட்களாகவே சாய்ந்த நிலையில் உள்ளது. காற்றின் வேகம் அதிகரிக்கும் போதெல்லாம் அச்சமாக இருக்கிறது. விபத்து நடக்கும் வரை காத்திருக்காமல் அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.​

எனவே, பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குன்னூர் நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, இந்த ராட்சத மரத்தைப் பாதுகாப்பான முறையில் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: