தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் தவித்த 5 வயது சிறுவன் மீட்பு

*பெற்றோரிடம் ஒப்படைப்பு

தாராபுரம் : தாராபுரத்தில் தனியாக தவித்த 5 வயது சிறுவனை மீட்ட போலீசார் அவனை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கரூர் பகுதியை சேர்ந்த பிஜிலா (27) தனது மகன் ரிக்ஜூ (5), பிஜிலாவிந்த தந்தை செல்வராஜ்(60) மற்றும் உறவினர்கள் நேற்று காலை பொள்ளாச்சியில் உறவினர் ஒருவரது துக்க நிகழ்ச்சிக்காக பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தாராபுரம் பஸ் ஸ்டாண்டில் பஸ் நின்ற போது செல்வராஜ் தண்ணீர் பாட்டில் வாங்க பஸ்சை விட்டு இறங்கி கடைக்கு சென்றார்.

தாத்தா பஸ்சை விட்டு இறங்கி செல்வதை பார்த்த சிறுவன் ரிக்ஜூவும் பஸ்சை விட்டு இறங்கி பின்னால் சென்றுள்ளான். சிறுவன் தன்னை பின்தொடர்வதை கவனிக்காமல் தாத்தா குடிநீர் பாட்டிலை வாங்கி கொண்டு மீண்டும் பஸ் ஏறி விட்டார். சற்று நேரத்தில் சிறுவன் ஏறும் முன்பாக பஸ்சும் பொள்ளாச்சி நோக்கி புறப்பட்டு சென்று விட்டது.

இதனால், சிறுவன் பஸ் ஸ்டாண்டில் தனியே நின்று அழத் துவங்கினான். சக பயணிகள் சிறுவனிடம் பெயர், ஊர் குறித்து விசாரித்தும் தகவல் கிடைக்காத நிலையில், மகளிர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.இதனிடையே தாராபுரத்தில் இருந்து 35 கி.மீ கடந்த பின்பு குடிமங்கலம் அருகே பஸ் வந்த போது, சிறுவனை காணாமல் திடுக்கிட்ட தாய் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக பஸ்சில் இருந்து இறங்கி மற்றொரு பஸ்சில் ஏறி தாராபுரம் காவல்நிலையம் வந்து புகார் அளிக்க வந்தனர். அப்போது சிறுவன் அங்கு இருந்ததை கண்டு நிம்மதி அடைந்தனர்.போலீசார் சிறுவனை தவறவிட்ட பெற்றோர் மற்றும் உறவினர்களின் கவன குறைவு குறித்து அறிவுரை வழங்கி சிறுவன் ரிக்ஜுவை ஒப்படைத்தனர்.

Related Stories: