சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடைபெற்ற தேர்வில் சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பணி நியமன ஆணை வழங்கினார். முதலமைச்சரின் நல்வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சுற்றுலா துறை கடந்த 5 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து மாபெரும் வளர்ச்சிப்பெற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக சுற்றுலாத்துறையில் சுற்றுலா முதலீடுகளும், வேலை வாய்ப்புகளும் பெரிதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுற்றுலாத்துறையில் காலியாக உள்ள உதவி சுற்றுலா அலுவலர் நிலை-2 பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் இரா.இராஜேந்திரன் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள். தமிழ்நாட்டில், சுற்றுலாத்துறையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில் முதலமைச்சரால் தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு மாமல்லபுரத்தில் துவக்கி வைக்கப்பட்டு பிரம்மாண்டமாக நடைப்பெற்றது.
இதன் மூலமாக ரூ.22,794 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. இதில் 65,937 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை உறுவாக்கி மேலும், தமிழ்நாட்டை சுற்றுலாவில் சிறந்த மாநிலமாக உருவாக்கிட வேண்டுமென முதலமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் உலகின் பழம்பெருமைகள். கலாச்சாரம். பண்பாடுகள் மற்றும் கீழடி போன்ற வரலாற்று சிறப்புகளின் தாயகமாக விளங்குகிறது. ஆன்மீக சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா மற்றும் மருத்துவ சுற்றுலா போன்றவற்றிக்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.
தமிழ்நாட்டின் தொல்லியல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களான, மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், ரதங்கள் மற்றும் சிற்பங்கள், தஞ்சை பெரிய கோயில், தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில், கங்கை கொண்ட சோழபுரம், நீலகிரி பாரம்பரிய மலை ரயில், மேற்கு தொடர்ச்சி மலை, மற்றும் செஞ்சி கோட்டை ஆகியவற்றை யுனெஸ்கோ அமைப்பு, உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்களாக அறிவித்துள்ளது இது தமிழ்நாட்டிற்க்கு பெருமை சேர்க்கும் வண்ணமாக உள்ளது.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் ஜெ.இன்னசென்ட் திவ்யா சுற்றுலாத்துறை இணை இயக்குனர் அ.சிவப்பிரியா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் சி.லட்சுமி பிரியா. மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
