*உயிரியல் ஆர்வலர்கள் கவலை
கூடலூர் : குமுளி மலைச்சாலையில் பிளாஸ்டிக் பைகளில் உணவை வைத்து வீசுவதால், அவற்றை உண்ணும் குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் உடல் நலம் பாதிக்கப்படும் என உயிரியல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தேனி மாவட்டம், கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் முக்கிய வழித்தடங்களில் குமுளி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. லோயர்கேம்பில் இருந்து மலைச்சாலையாக தமிழக வனப்பகுதியின் ஊடே இந்தச்சாலை அமைந்துள்ளது.
இந்த சாலையின் வழியாக தமிழக-கேரளா மக்கள் போக்குவரத்தும், தேக்கடி உள்ளிட்ட சுற்றுலாத் தளங்களுக்கு சுற்றுலா பயணிகளும், சபரிமலை செல்லும் பக்தர்களும் அதிகமாக வந்து செல்கின்றனர். இந்த சாலை செல்லும் வனப்பகுதியானது, யானை, கரடி, சிறுத்தை, புலி, காட்டு மாடு, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் மற்றும் பல்லுயிர்களின் வாழ்விடமாக உள்ளது. இந்தச் சாலையின் வழியே வாகனத்தில் செல்வோர், வனத்தில் வாழும் குரங்குகளுக்கு இரக்கம் காட்டுவதாக நினைத்துக் கொண்டு உணவு அளித்து வருகின்றனர்.
இதனால் தானாக இரையை தேடி உட்கொள்ளும் வனவிலங்குகள் அதனுடைய இயல்பான குணத்தை இழந்து வருகின்றன. மேலும் வனப்பகுதியை ஒட்டி தினமும் நூற்றுக்கணக்கான குரங்குகள் வாகனங்களில் இருந்து வீசும் உணவுக்காக காத்துக் கிடக்கின்றன. வாகனங்களை நோக்கி ஓடும் போது அவை அடிபட்டு கை கால்களை இழப்பதும் உண்டு.
சில சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதற்காக உணவுப்பொருட்களோடு நெகிழிப்பை மற்றும் வனவிலங்குகளுக்கு ஒவ்வாத பொருட்களை வீசி செல்வதால் வனத்திற்கும் வனவிலங்குகளுக்கும் சில சமயம் அது கேடாகவும் மாறிவிடுகிறது. மேலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது குரங்குகள் உணவுக்காக தாவுவதால் வாகன விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அவ்வாறு உணவளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த சாலையின் இருபுறமும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள், மக்காத குப்பைகள், துணிகளும் ஆங்காங்கே வீசுபவர்களை, வனத்துறையினர் கண்காணித்து அவ்வாறு செய்பவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் வன மற்றும் வன உயிரியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
