சென்னையில் இருந்து டெல்லி செல்ல இருந்த ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு முனையம் டெர்மினல் 4ல் இருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானம் இன்று காலை 6 மணிக்கு டெல்லி புறப்பட தயாரானது. விமானத்தில், 165 பயணிகள் 6 விமான ஊழியர்கள் உட்பட 171 இருந்தனர். விமானத்தின் இயந்திரங்களை விமானிகள் சரி பார்த்தனர். அப்போது இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானிகள் கண்டுபிடித்தனர். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த விமானத்தில் டெல்லி செல்வதற்கு இருந்த எம்பி கதிர் ஆனந்த், ‘தான் நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, அவசரமாக டெல்லி செல்ல வேண்டும்’ என்று ஏர் இந்தியா அதிகாரிகளிடம் கூறினார். உடனே அவரை மட்டும் காலை 6.55 மணிக்கு, டெல்லி சென்ற மற்றொரு ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைத்தனர். மற்ற 164 பயணிகள், சென்னை விமான நிலைய ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர். விமான பொறியாளர்கள் குழுவினர், விமானத்தில் பழுதான இயந்திரங்களை சரி பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து காலை 10.15 மணிக்கு பழுதுபார்க்கப்பட்டு, 164 பயணிகள், 6 விமான ஊழியர்கள், 170 பேருடன், விமானம் 4 மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. கோளாறை, விமானி தகுந்த நேரத்தில் கண்டுபிடித்ததால் அனைவரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Related Stories: