*2 பேருக்கு தீவிர சிகிச்சை
கடலூர் : சிதம்பரத்தில் இருந்து சென்னை நோக்கி நேற்று மதியம் காரில் வாலிபர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் ஒருவர் சென்று கொண்டிருந்தார். கடலூர் சாவடி தேசிய நெடுஞ்சாலையில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. தொடர்ந்து மற்றொரு பைக்கில் வந்த இருவர் மீதும் மோதியது. இதில் பின்னால் அமர்ந்து வந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். மேலும் கடலூர் டிஎஸ்பி தமிழ் இனியன், எஸ்ஐ பிரசன்னா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சிதம்பரம் கஞ்சி தொட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் கிருஷ்ணராஜ்(23). இவர் சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், சென்னையில் தங்கி வேலை பார்ப்பதாகவும் சனி, ஞாயிறு விடுமுறையில் சொந்த ஊரான சிதம்பரத்திற்கு வந்துவிட்டு, திங்கட்கிழமை பணிக்கு சென்றதாக தெரியவந்தது.
இவர் விடுமுறை முடித்து சென்னைக்கு கடலூர் சாவடி வழியாக செல்லும்போது எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் கடலூர் மாவட்டம் தட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த அரசன்(56), என தெரியவந்தது. இவர்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் நெய்வேலி கிளையில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கடலூரில் உள்ள அலுவலகத்திற்கு உறவினர் ஒருவருடன் சென்றபோது விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடன் சென்ற கள்ளக்குறிச்சி மாவட்டம் சிவபட்டினம் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் சதீஷ்(30) பலத்த காயத்துடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு இருசக்கரத்தில் வந்த அடையாளம் தெரியாத நபரும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
