ஒடுகத்தூர் அருகே எருதுவிடும் விழா இலக்கை நோக்கி ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த 200 காளைகள்

ஒடுகத்தூர் : ஒடுகத்தூர் அருகே உள்ள மேலரசம்பட்டு கிராமத்தில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வாணியம்பாடி, வேலூர், குடியாத்தம், ஆம்பூர் மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டது.

இதற்காக, காளைகளின் உரிமையாளர்கள் தங்களின் காளைகளுக்கு வண்ண மலர்களை கொண்டு அலங்கரித்து அழைத்து வந்தனர். தொடர்ந்து காலை 9 மணிக்கு அரசு அதிகாரிகள் முன்னிலையில், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் அரசு வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு எருதுவிடும் திருவிழா உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

தொடர்ந்து நடந்த விழாவிற்கு கோயில் தர்மகர்த்தா, நாட்டாண்மை தரணி, மேட்டுக்குடி குட்டி ஆகியோர் தலைமை தாங்கினர். ஒன்றிய குழு உறுப்பினர் பிரேமலதா பாபு, ஊராட்சி மன்ற தலைவர் திருக்குமரன், துணை தலைவர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக காளைகள் கட்டவிழ்த்து விட்டதும், அவை மந்தையில் திரண்டிருந்த இளைஞர்கள் மத்தியில் புழுதி பறக்க ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்து ஓடியது.தொடர்ந்து, குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் அடைந்த காளையின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

அதில், முதல் பரிசு ரூ.72 ஆயிரம், 2ம் பரிசு ரூ.60 ஆயிரம், 3ம் பரிசு ரூ.50 ஆயிரம், 4ம் பரிசு ரூ.40 ஆயிரம், 5ம் பரிசு ரூ.30 என மொத்தம் 51 பரிசுகள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டது. காளைகள் முட்டியதில் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு, அங்கு முகாமிட்டு இருந்த மருத்துவ குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

Related Stories: