*பொதுமக்கள் அச்சம்
குன்னூர் : குன்னூர் அருகே குடியிருப்பு பகுதிகளில் பகலில் உலா வரும் காட்டுமாடுகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் நிலவி வரும் வன விலங்கு-மனித மோதல்களின் ஒரு பகுதியாக தற்போது குடியிருப்பு பகுதிகளில் காட்டுமாடுகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக குன்னூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் பகல் நேரங்களிலேயே காட்டுமாடுகள் ஊடுருவல் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.இந்நிலையில் குன்னூர் பெள்ளட்டிமட்டம் அடுத்துள்ள எமகுண்டு பகுதியில் நேற்று பகல் நேரத்தில் குடியிருப்புக்குள் காட்டுமாடு ஒன்று உலா வந்தது.
நீண்ட நேரமாக அந்தப்பகுதியில் உள்ள வீடுகளின் வாசலில் நின்று கொண்டு ஜன்னல் மற்றும் கதவு வழியாக வீடுகளை நோட்டமிட்டது. அப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், திடீரென காட்டுமாடு தங்களுக்கு அருகில் வந்ததை கண்டு அலறியடித்துக் கொண்டு வீட்டிற்குள் ஓடினர்.
எனினும் காட்டுமாடு நீண்ட நேரம் அங்கேயே முகாமிட்டதால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலை ஏற்பட்டது.இந்நிலையில் அப்பகுதி மக்கள் வனத்துறையினர் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் காட்டுமாடுகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
