தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவுத்திட்டம் துவக்கம்

*1035 பேர் பயனடைவார்கள்

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் 5 நகராட்சிகள்,10 பேரூராட்சிகளில் முதலமைச்சரின் தூய்மை பணியாளர்களுக்கான காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்தார்.

இதன் மூலம் 1035 தூய்மை பணியாளர்கள் பயனடைவார்கள்.திருவள்ளுர் மாவட்டம் போளிவாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்‌.

இதனை தொடர்ந்து நீலகிரியில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு விரிவாக்க திட்ட துவக்க விழா ஊட்டி சிறுவர் மன்றத்தில் நடந்தது.

அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்து தூய்மைப்பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து, காலை உணவினை வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஊட்டியில் 224 பேர், குன்னூரில் 179 பேர், கோத்தகிரியில் 98 பேர், கூடலூரில் 115 பேர், நெல்லியாளத்தில் 97 பேர் என மொத்தம் 713 தூய்மைப் பணியாளர்களுக்கும் காலை உணவு வழங்கப்படுகிறது.

மேலும் அதிகரட்டி பேரூராட்சியில் 37 பேர், பிக்கட்டியில் 19 பேர்,தேவர்சோலையில் 45 பேர், உலிக்கலில் 29 பேர், ஜெகதளாவில் 56 பேர், கேத்தியில் 48 பேர், கீழ்குந்தாவில் 26 பேர், நடுவட்டத்தில் 22 பேர், ஓவேலியில் 16 பேர், சோலூரில் 24 என 322 பேர் என மொத்தம் 1035 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

திங்கள் கிழமை இட்லி, மெதுவடை சாம்பார், செவ்வாய்கிழமை ரவா கிச்சடி, மிளகாய் சட்னி, புதன்கிழமை பொங்கல்,சாம்பார், வியாழன் கிழமை ரவா உப்புமா, தேங்காய் சட்னி, வெள்ளிக்கிழமை இட்லி, மெதுவடை, சாம்பார், சனிக்கிழமை ரவா பொங்கல், சாம்பார், ஞாயிற்றுக்கிழமை சேமியா கிச்சடி, சாம்பார் போன்ற உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், ஊட்டி எம்எல்ஏ கணேஷ், நகராட்சி தலைவர் வாணீஸ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், திட்டக்குழு உறுப்பினர்கள் ஜார்ஜ், விசாலாட்சி விஜயகுமார், தூய்மைப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: