*பிரசாரம், தலைவர்கள் வருகையை எதிர்நோக்கும் வியாபாரிகள்
நாகர்கோவில் : தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், குமரி மாவட்டத்தில் கடை வீதியில் அனைத்துக் கட்சிகளின் துண்டுகள், கொடிகள், தோரணங்கள் உள்ளிட்டவை விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளன.தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை அனைத்துக் கட்சிகளும் தீவிரப்படுத்தி உள்ளன.
திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் கட்சி, மநீம, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் என மாநில, தேசிய கட்சிகள் அனைத்தும் முன்னேற்பாடுகளில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தெருமுனைக்கூட்டம், துண்டு பிரசுரம் விநியோகம் உள்ளிட்டவற்றையும் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் நாகர்கோவில் மணிமேடை, அலெக்சாந்திரா பிரஸ் ரோடு பகுதியில் உள்ள கட்சிக் கொடிகள் விற்பனையகங்களில் அனைத்துக் கட்சிகளின் வண்ண, வண்ணக் கொடிகள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன. புதிய வரவான தமிழக வெற்றிக்கழகத்தின் கொடிகள் அதிகம் வந்துள்ளன.
இது தொடர்பாக வியாபாரிகள் கூறுகையில், கட்சிக் கொடிகள், மப்ளர்கள், கரை வேட்டி, துண்டு உள்ளிட்டவை தேர்தல் நேரத்தில் அதிகம் விற்பனையாகும்.
இப்போதே பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடப்பதால், அனைத்துக் கட்சிகள் சார்ந்த கரை வேட்டி, துண்டு, மப்ளர் விதவிதமான வடிவ துண்டுகள், சட்டைகள், கட்சி கொடிகள், தோரணங்கள், கார்கள், டூவீலர் உட்பட அனைத்து வகை வாகனங்களில் கட்டும் கட்சிக் கொடி அட்டை, பிளாஸ்டிக் அட்டை அதிகம் விற்பனையாகும். எனவே, அதிகளவில் அவற்றை கொள்முதல் செய்து வைத்துள்ளோம்.
திருப்பூர், ஈரோடு, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள பல்வேறு வகையான கொடிகளும், தோரணங்களும் விற்பனைக்கு உள்ளன. கட்சி நிகழ்வுகளுக்கு வரும் முக்கிய விருந்தினர்களுக்கு வழங்க கரை வேட்டிகள், கரை போடப்பட்ட துண்டுகள், மப்ளர்களை அதிகம் கொள்முதல் செய்துள்ளோம்.
துண்டுகள் ரூ. 30 முதல், 160 வரையும், கரை வேட்டி ரூ. 140 முதல், ரூ. 600 வரையும், மப்ளர் ரூ.100, ரூ. 120 முதல், ரூ. 300 வரை, கட்சி கொடிகள் ரூ. 20 முதல் நீள அகலத்துக்கு ஏற்ப ரூ. 120 வரையிலான விலையில் உள்ளன என்றனர். பிரசாரம், தலைவர்கள் வருகை உள்ளிட்ட சமயங்களில் அதிகளவில் விற்பனை இருக்கும். எனவே பிரசார தேதி அறிவிப்புக்கு பின் தான் விற்பனை சூடுபிடிக்கும் என்றனர்.
