*கலெக்டர், எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு
தர்மபுரி : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்ததை அடுத்து, தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, அரூர் நகராட்சிகள் மற்றும் 9 பேரூராட்சிகளில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம் செய்யப்பட்டது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (9ம் தேதி) மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களுக்கு, காலை உணவு வழங்கும் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, தர்மபுரி நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்ட விரிவாக்கம், தர்மபுரி கேபிஜே மகாலில் காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்து கொண்டு, தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும், காலை உணவு பெறுவதற்கான டிபன் பாக்ஸ்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு தர்மபுரி திமுக எம்பி ஆ.மணி முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து, காணொலி காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சதீஸ் கலந்து கொண்டு பார்வையிட்டார். இதுகுறித்து கலெக்டர் கூறுகையில், ‘தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் பணியாற்றும் 385 தூய்மை பணியாளர்களுக்கு, தினசரி 4 டிவிசனில் 7 இடங்களில் காலை உணவு வழங்கப்படும்.
அரூர் நகராட்சியிலும், காரிமங்கலம், பென்னாகரம், பாப்பாரப்பட்டி, பாலக்கோடு, மாரண்டஅள்ளி, கடத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கம்பைநல்லூர் ஆகிய பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும், அந்தந்த இடங்களில் காலை உணவு வழங்கப்படும்,’ என்றார்.
இந்நிகழ்ச்சியின் போது, கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க, அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பின்தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், தர்மபுரி பாமக எம்எல்ஏ வெங்கடேஸ்வரன், நகர்மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, நகர்மன்ற துணைத்தலைவர் நித்யா அன்பழகன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் மனோகரன், நகராட்சி கமிஷனர் சேகர், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேஷ், கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராஜசேகரன், ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் கிருஷ்ணன், காரிமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
கடத்தூர்: கடத்தூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்க விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் கேஸ்மணி தலைமை வகித்தார். செயல் அலுவலர் வெங்கடாசலம், துணைத் தலைவர் வினோத் முன்னிலை வகித்தனர். தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவை வழங்கி திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. தமிழக அரசு தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது என தூய்மை பணியாளர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில், பேரூராட்சி கவுன்சிலர் கார்த்திக், ஸ்ரீதேவி சதீஷ்குமார், மயில்சாமி, பேரூராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
