4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் துவக்கம்

*அமைச்சர் பங்கேற்பு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை திருவள்ளுவர் மாவட்டம் போளிவாக்கத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம் தொடக்க விழா, ஈரோடு பரிமளம் மகாலில் நடைபெற்றது.

இதில், அமைச்சர் சு.முத்துசாமி பங்கேற்று, ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களிலும் உள்ள 2,165 தூய்மை பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கும், பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி, பெருந்துறை ஆகிய 5 நகராட்சிகளில் உள்ள 874 துாய்மைப்பணியாளர்களுக்கும், 41 பேரூராட்சிகளை சேர்ந்த 1,543 துாய்மைப்பணியாளர்கள் என மொத்தம் 4,582 தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் பணியாற்றும் 2,165 தூய்மை பணியாளர்களில், 2,038 பேருக்கு 47 இடங்களில் காலை உணவும், மதிய உணவு 9 இடங்களில் 127 பணியாளர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.

இதற்கான ஆண்டு செலவினம் ரூ.3 கோடியே 47 லட்சத்து 47 ஆயிரத்து 702 ஆகும்.காலை மற்றும் மதிய நேரங்களில் பணிபுரியும் துாய்மைப்பணியாளர்களுக்கு உணவு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவர்களுக்கு உணவுகள் வழங்கப்பட உள்ளது.

திங்கள் காலை உணவாக இட்லி, மெதுவடை மற்றும் சாம்பார், மதிய உணவாக சாம்பார் சாதம் மற்றும் பொரியல் வழங்கப்பட உள்ளது. செவ்வாய் காலை உணவாக ரவா கிச்சடி மற்றும் ரெட் சட்னி, மதிய உணவாக எலுமிச்சை சாதம் மற்றும் உருளைக்கிழங்கு அல்லது சேனைக்கிழங்கு அல்லது வாழைக்காய் வறுவல்,

புதன் காலை உணவாக வெண்பொங்கல் மற்றும் சாம்பார், மதிய உணவாக வெஜ் பிரியாணி, வெங்காய பச்சடி, வியாழன் உப்புமா மற்றும் புதினா அல்லது கொத்தமல்லி சட்னி, மதிய உணவாக தக்காளி சாதம் மற்றும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல், வெள்ளி காலை உணவாக இட்லி, மெதுவடை மற்றும் சாம்பார், மதிய உணவாக கொத்தமல்லி அல்லது புதினா சாதம் மற்றும் உருளைக்கிழங்கு,

சேனைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல், சனிக்கிழமை காலை உணவாக ரவா பொங்கல் மற்றும் சாம்பார், மதிய உணவாக புளி சாதம் மற்றும் உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல், ஞாயிற்றுக்கிழமை காலை உணவாக சேமியா கிச்சடி மற்றும் சாம்பார், மதிய உணவாக வெஜ் பிரியாணி, வெங்காய பச்சடி ஆகிய உணவு வகைகள் ஒவ்வொரு கிழமைகளில் காலை மற்றும் மதிய உணவு வகைகள் வழங்கப்படவுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கந்தசாமி, எம்எல்ஏ சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) காஞ்சன் சௌதரி, மாநகர நல அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: