அஜித்குமார் காவல் மரணம் உறுதி நகை திருடிய புகார் உண்மை இல்லை: ஐகோர்ட் கிளையில் சிபிஐ தகவல்

மதுரை: நிகிதாவின் நகை திருட்டு புகாரில் உண்ைம இல்லை என்றும், காவல் மரணம் நடந்தது உறுதியாகியுள்ளதாகவும் ஐகோர்ட் கிளையில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோயில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 27.6.2025ல் நகை மாயமான புகாரில் தனிப்படை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். கோயிலுக்கு தனது தாயாருடன் வந்திருந்த நிகிதா என்பவர், தனது காரில் இருந்த நகைகள் அஜித்குமார் திருடியிருக்கலாம் என புகார் அளித்திருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் போலீசாரின் விசாரணையில் இருந்த போது மறுநாள் அஜித்குமார் உயிரிழந்தார். போலீசார் தாக்கியதால் தான் அவர் இறந்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், டிரைவர் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிஐ போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன், ஆகிய 5 பேர் தங்களுக்கு ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி எஸ்.ஸ்ரீமதி முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், ‘‘அஜித் குமாரின் மரணம் ஒரு காவல் மரணம் என்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதியப்பட்டுள்ள 10 பேருக்குமே இதில் தொடர்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, ‘‘நகை திருட்டு புகார் அளிக்கப்பட்டது உண்மையா?’’ என்றார்.

சிபிஐ தரப்பில், ‘‘புகாரில் உண்மை இல்லை என்பதால் அது தொடர்பான வழக்கு முடிக்கப்பட்டது. இதுதொடர்பான அறிக்கையும் தயாராகி வருகிறது’’ என கூறப்பட்டது. அப்போது நீதிபதி, ‘‘ஒன்றுமே இல்லாத விஷயத்திற்கு ஒருவரை அடித்து கொலை செய்து விட்டனர். புகார் அளித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? அவர் தானே காரணம்? இதற்கு என்ன காரணம் இருக்கும்? முன்விரோதம் ஏதும் இருந்ததா?’’ என்றார்.

சிபிஐ தரப்பில், ‘‘முன்விரோதம் எதுவும் இல்லை. டிஎஸ்பி விசாரிக்குமாறு கூறியதால் இவ்வாறு நடந்துள்ளது’’ என கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி, ‘‘யாராக இருந்தாலும் சிறையிலேயே இருக்கட்டும். மனம் பதறுகிறது. ஒன்றுமில்லா விஷயத்திற்காக ஒருவரை இப்படி அடித்திருக்கிறீர்கள். காவல் துறையினருக்கு பாடம் புகட்டுவோம்’’ எனக் கூறிய நீதிபதி விசாரணையை பிப். 17க்கு தள்ளி வைத்தார்.

Related Stories: