சென்னை: நடிகரும், மநீம தலைவருமான கமல்ஹாசன் எம்.பி, மாநிலங்களவையில் பேசிய கன்னி பேச்சு வருமாறு: என்னை இந்த பதவிக்கு பரிந்துரைத்து, இந்த அவையில் அமர வைத்த தமிழ்நாட்டை சேர்ந்த எனது கூட்டணி கட்சியின் மதிப்பிற்குரிய உறுப்பினர்களே, இந்த தருணத்தை நான் பெருமையாக கருதுகிறேன். அருமை சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. எங்களது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீது நிகழ்த்தப்படும் எந்தவொரு ஊடுருவலையும் எப்படி எதிர்கொள்வது என்று அண்ணா எங்களுக்கு கற்றுக்கொடுத்தார்.
நாங்கள் வாக்களிக்க விரும்புகிறோம். ஆனால், தேர்தல் ஆணையங்களோ எங்களது வாக்குரிமையை சரிபார்த்துக் கொண்டிருக்கின்றன. அவர்கள் பெயர்களில் இருக்கும் எழுத்துப்பிழைகளையும், முகவரிகளையும் சரிபார்க்கிறார்கள். ஏற்கனவே பீகார் மாநிலம், ‘உயிருடன் இருக்கும் பிணங்கள்’ நிறைந்த தேசமாகிவிட்டது. இந்த நோய் நாடு முழுவதும் பரவுவதை நாங்கள் விரும்பவில்லை.
தமிழ்நாட்டில் மட்டும் காகித அளவில் சுமார் 1 கோடி பேர், ‘உயிருடன் இருக்கும் பிணங்களாக’ மாற்றப்படக்கூடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். ஜனநாயக ரதம் ஒருபோதும் மக்கள் மீது ஏறி செல்லக்கூடாது. அதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்த அரசாங்கமும் நிரந்தரத்தை இலக்காக கொள்ள முடியாது, கொள்ளவும் கூடாது. இந்த அவையில் எனது மக்களுக்காக தமிழில் சில வார்த்தைகளை பேசுகிறேன். இது பக்கத்து அவையில் (மக்களவை) பேசப்பட்ட சில வார்த்தைகளால் எனக்கு ஏற்பட்ட ஆதங்கமும், கோபமும் மட்டுமே.
தமிழன் பிச்சை எடுக்க மாட்டான். அதுவும், உங்கள் பிச்சையை ஏற்கவே மாட்டான். ஓட்டையும், நாட்டையும் இந்த தமிழன் கமல்ஹாசன் விற்கவே மாட்டான். பகுத்தறிந்த தமிழச்சித்தன் கூற்று இது. உம் வினை உம்மைச் சுடுக. ஓட்டப்பம் உம் வீட்டைச் சுடுக. என்றும் எங்கள் நாடு நீடூழி வாழும். வந்தீர்… வென்றீர்… செல்வீர். இது உலக நியதி. அரசியல் நீதியும் கூட. தமிழ் என்றும் வாழும் நலமுடன். வணக்கம், அவை வந்தடைந்த தலைவர் கூட்டத்துக்கு. சென்று வருவேன். நாளை எமதே என்றார்.
