எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார நிபுணரா? அதிமுக முடிந்து போன கதை இனிமேல் அது வரவே வராது… அமைச்சர் ஐ.பெரியசாமி விளாசல்

திண்டுக்கல்: திண்டுக்கலில் அமைச்சர் ஐ.பெரியசாமி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சென்னையில் நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்தில், எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 ஆக வழங்கப்படும், கல்விக் கடனை அரசே ஏற்கும். வருடத்திற்கு மூன்று சிலிண்டர் இலவசமாக தரப்படும் என்றெல்லாம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறார். தேர்தல் வருகிறது அதற்காக தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடுவார்கள்.  ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் தான்.

அதிமுக ஆட்சிக்கு வரப்போவதில்லை எதிர்க்கட்சியாக கூட வரப்போவதில்லை. வாக்குறுதிகளை சொல்லி விட்டு போகலாம். ஆனால், அதனை மக்கள் நம்ப மாட்டார்கள். ரூ.2000 கொடுப்பதாக கூறினாலும் கூட நம்ப மாட்டார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. அப்போது இதையெல்லாம் கொடுத்திருக்க வேண்டியது தானே? அதிமுக முடிந்து போன கதை. இனிமேல் அது வரவே வராது.

எடப்பாடி பழனிசாமியின் வாக்குறுதிகளை அவரது கட்சியினரே நம்பப் போவதில்லை. மக்களும் நம்பப் போவதில்லை. கடந்த தேர்தலில் பாஜவுடன் கூட்டணி இல்லை என்றவர், இப்போது எப்படி கூட்டணிக்கு சென்றுள்ளார். தன்னை பாதுகாத்துக் கொள்ளத்தான் எடப்பாடி பழனிசாமி பாஜ கூட்டணியில் இணைந்துள்ளார். எடப்பாடி அதிமுக கட்சியை பாஜவிடம் அடகு வைத்துவிட்டார். 24 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை அதிமுக ஆட்சியில் 9 லட்சம் ஆக குறைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி என்ன பொருளாதார நிபுணரா? அவர் எப்படி பொருளாதாரத்தை உயர்த்துவார். டாஸ்மாக்கில் இருந்து அரசுக்கு கட்ட வேண்டிய பணத்தை அதிமுக காலத்தில் கட்டவில்லை. அந்தப் பணம் எங்கே போனது? எடப்பாடி பழனிசாமி கட்சியினரை பக்கத்திலே வைத்துக் கொண்டு ஒரு ஷோ நடத்துகிறார்‌. அவருக்கு வேண்டியது அந்தக் கட்சி அலுவலகம் தான். அவருக்கு தேர்தலில் வெற்றி பெற வேண்டும் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. இவ்வாறு கூறினார்.

Related Stories: