நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் ரயில்களை உள் வாங்குவதில் சில சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் பிளாட்பாரங்கள் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. திருவனந்தபுரம் கோட்டத்தில் அதிக வருவாய் பெற்று தரும் ரயில் நிலையமாக, நாகர்கோவில் ஜங்ஷன் (சந்திப்பு) ரயில் நிலையம் உள்ளது. இங்கிருந்து 70 க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆண்டுக்கு ரூ.80 கோடிக்கு மேல் வருமானம் வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து திப்ரூகார் செல்லும் இந்தியாவின் மிக நீண்ட தூர ரயிலான விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலும், நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பராமரிப்பு செய்யப்பட்டு புறப்பட்டு செல்கிறது.
இந்த ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1, 1 ஏ, 2, 3 ஆகிய 4 பிளாட்பாரங்கள் உள்ளன. இதில் 1, 2, 3 ஆகிய பிளாட்பாரங்களில் தான் ரயில்களை உள் வாங்கும் வசதி உள்ளன. அதுவும் அதிகபட்சமாக 1, 2 வது பிளாட்பாரங்களில் தான் ரயில்கள் அதிகம் உள் வாங்கப்படுகின்றன. இந்த இரு பிளாட்பாரங்களில் ரயில்கள் நின்றால் மற்ற ரயில்களை உள் வாங்குவதில் பெரும் சிரமம் ஏற்படும். இட வசதி இல்லாமல் நாகர்கோவில் சந்திப்புக்கு வெளியே நீண்ட நேரம் ரயில்கள் காத்திருக்கும் நிலை உள்ளது.
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெளியே ஆரல்வாய்மொழி, முப்பந்தல் அருகே நிறுத்தப்பட்டு நாகர்கோவில் சந்திப்பில் 1, 2 பிளாட்பாரம் காலியானவுடன் ரயில்கள் உள் வாங்கப்படும்.
சென்னையில் இருந்து காவல் கிணறு வரையிலான சுமார் 702 கி.மீ. தூரத்தை 8 மணி நேரத்தில் கடந்த ரயில், காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில் வருவதற்கான 24 கி.மீ. தூரத்தை கடக்க சுமார் 55 நிமிடங்கள் எடுத்து கொள்ளும் நிலை உள்ளது. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. புதிதாக 4, 5 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இவை இன்னும் செயல்பாட்டுக்கு வர வில்லை. தற்போது 26 பெட்டிகள் கொண்ட ரயில்கள் முதல் பிளாட்பாரத்தில் தான் உள் வாங்கப்படுகிறது. இதனால் முதல் பிளாட்பாரத்தில் ரயில் நின்றதால், ரயில்களை உள் வாங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. இதே நிலை தான் டவுன் ரயில் நிலையத்திலும் உள்ளது. டவுன் ரயில் நிலையத்தில் 3 பிளாட்பாரங்கள் உள்ளன.
ஆனால் 2, 3 பிளாட்பாரங்களில் தான் ரயில்கள் உள் வாங்கப்படுகிறது. முதல் பிளாட்பாரத்தில் ரயில் உள் வாங்க இணைப்பு தண்டவாளங்கள் இன்னும் சரி செய்யப்பட வில்லை. எனவே இது போன்ற பிரச்சினைகளை தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ரயில்களை உள் வாங்குவதில் தற்போது எந்த பிரச்சினையும் இல்லை. முக்கியமான ரயில்கள் வரும் சமயத்தில் பிளாட்பாரம் காலியாக வைக்கப்படுகிறது. சில சமயங்களில் சிக்னல் பிரச்சினையால் சில நிமிடங்கள் பைபாசில் நிற்கலாம். பெரிய, பெரிய ரயில் நிலையங்களில் கூட இந்த பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது என்றனர்.
ரயில் நிலைய சாலை விரிவாக்கம்
நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தின் விரிவாக்க பணியின் அங்கமாக ரயில் நிலைய சாலையும் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தற்போது கம்பளம் சந்திப்பு முதல் சந்திப்பு ரயில் நிலையம் வரையிலான உள்ள சாலையின் நடுவே சென்டர் மீடியன்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே அலங்கார விளக்குகள் பொருத்தப்பட உள்ளன. ரயில் நிலைய சாலையை பொறுத்தவரை மாநகராட்சி, ரயில்வே என இரு துறையிடம் பாதி, பாதியாக உள்ளது. கோட்டார் மார்க்கெட் பகுதியில் லாரிகளில் சரக்குகள், ஏற்றி இறக்கப்படுவதால் கடும் நெருக்கடி நிலை இருக்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ரயில்களின் எண்ணிக்கையும், ரயில் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஆனால் இதை கருத்தில் கொண்டு ரயில் நிலைய சாலை பிரச்சினைக்கு இதுவரை எந்த தீர்வும் சம்பந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வில்லை என்று பயணிகள் குற்றம் சாட்டி உள்ளனர். மாநகராட்சி ஆணையராக சரவணக்குமார் இருந்த சமயத்தில், சந்திப்பு ரயில் நிலைய சாலையில் சரக்குகள் ஏற்றி, இறக்க கட்டுப்பாடுகள் இருந்தன. காவல்துறையும் பீக் அவர்ஸில் சரக்குகள் ஏற்றி, இறக்க தடை விதித்தது. ஆனால் இப்போது அனைத்து கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்ததால், பயணிகள் ரயில் நிலையத்துக்கு செல்ல பெரும் சிரமம் அடைகிறார்கள்.
