அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 426 கவுரவ விரிவுரையாளர்கள் தற்காலிகமாக பணி நியமனம்: உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 2025-26ம் கல்வியாண்டிற்கு பாடப்பிரிவுகளில் 15,000க்கும் மேற்பட்ட கூடுதல் இடங்களும், புதிய பாடப்பிரிவுகளும் தோற்றுவிக்கப்பட்டன. 37 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளும் தொடங்கப்பட்டுள்ளன.

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் உடனடியாக நிரந்தர ஆசிரியர்களை பணியமர்த்த இயலாத நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலுக்கிணங்க மாணவர்களுக்கான கல்வி கற்றலில் தொய்வு ஏற்படாமல் இருக்க முதற்கட்டமாக 574 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும், பின்னர் 823 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தவும் விளம்பரங்கள் வெளியிடப்பட்டு, தற்காலிகமாக 1,277 கவுரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக மேலும், தமிழ் மற்றும் ஆங்கில மொழி பாடப்பிரிவுகளுக்கு 306 கவுரவ விரிவுரையாளர்களை தற்காலிகமாக பணியமர்த்துவதற்கு ஆணையிடப்பட்டது. இத்துடன் ஏற்கனவே வெளியிடப்பட்ட பணியிடங்கள் சேர்க்கை பெறாத 120 பணியிடங்களும் சேர்த்து ஆகமொத்தம் 426 தற்காலிக கௌரவ விரிவுரையாளர் பணியிடங்கள் 29 பாடப்பிரிவுகளுக்கு நிரப்பப்படவுள்ளது.

இது குறித்த முழு விவரங்கள் https://www.tngasa.org என்ற இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள இணையதளம் வாயிலாக, வரும் 9ம் தேதி வரை தகுதியுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: