நாம ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையே உங்களுக்கு இல்லை: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி காட்டம்

சென்னை: மாவட்டச் செயலாளர்களிடம் உற்சாகம் இல்லை. உங்களுக்கு நாம் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை என்று மாவட்ட செயலாளர் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கூறினார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று காலை 11 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்தது.

அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் என்பது குறித்து இன்னும் அறிவிப்பு வெளியிடப்படவில்லை. பாஜ அதிக இடங்களை கேட்கிறது. குறைந்தபட்சம் 50 இடங்களை அதிமுகவிடம் இருந்து பெறலாம் என்றும், எந்தெந்த தொகுதி என்ற பட்டியலையும் அதிமுக தலைமையிடம் அமித்ஷா கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பாஜ அதிக இடங்கள் மற்றும் குறிப்பிட்ட தொகுதிகளை கேட்பதால், தற்போது அதிமுகவினர் செல்வாக்கு உள்ள பல தொகுதிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

இதுபோன்ற நிலையில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக வேட்பாளர் தேர்வு, கூட்டணி தொடர்பான நிலைப்பாடு, தொகுதி பங்கீடு, பூத் கமிட்டி பணிகள் போன்ற தேர்தல் பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. குறிப்பாக, தேர்தல் பணிகளில் சுணக்கம் காட்டும் மாவட்ட செயலாளர்களை எச்சரித்து, அனைவரையும் ஒருங்கிணைத்து முழு வீச்சில் தேர்தல் களத்தில் இறங்க வேண்டும்.

இதுவரை நடந்த தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சரியான வியூகம் அமைத்து வெற்றிபெற வேண்டும் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் எடப்பாடி கேட்டுக் கொண்டார். மேலும் ‘‘தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆனால் யாரும் வேலைகளை செய்யவில்லை. பூத் கமிட்டிகள், ஐ.டி விங்குடன் யாரும் இணைந்து செயல்படவில்லை. மாவட்டச் செயலாளர்களிடம் உற்சாகம் இல்லை. உங்களுக்கு நாம் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையே இல்லை.

நான் ஏற்கனவே முதல்வராகிவிட்டேன். மீண்டும் முதல்வர் ஆக வேண்டும் என்ற ஆசை எல்லாம் இல்லை. ஆனால் நீங்கள் எம்எல்ஏ ஆக வேண்டும், அமைச்சர் ஆக வேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விருப்பம் உங்களுக்கும் இருந்தால் நீங்கள் உடனே பணிகளை தொடங்குங்கள். அதிமுக கூட்டணியில் விரைவில் கட்சிகள் சேர உள்ளன. அதனால் கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன். பாஜ அதிக சீட் கேட்கிறது. கூட்டணிகள் அதிக சீட் கேட்கிறார்கள். நமக்கு சீட் கிடைக்காது. நாம் ஏன் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம்.

பாஜ உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு அவர்களின் கட்சி செல்வாக்கிற்கு ஏற்றார்போல சீட் ஒதுக்கப்படும். எந்த தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று நான் முடிவு செய்வேன். அதனால் நீங்கள் கவலைப்படாமல் வேலை செய்யுங்கள். முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். உங்களை நீங்களே நம்பாவிட்டால், தொண்டர்கள் எப்படி நம்புவார்கள். இதனால் அடுத்த ஆட்சி என்று நம்புங்கள். பணிகளை தொடர்ந்து செய்யுங்கள்,’’ என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Related Stories: