தண்டவாளத்தில் இரும்பு ராடு வைத்து சென்னை ரயிலை கவிழ்க்க சதியா?: ஜோலார்பேட்டை அருகே பரபரப்பு

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை அருகே ரயில் தண்டவாளத்தில் இரும்பு ராடு இருந்ததால் ‘வந்தே பாரத்’ ரயிலை கவிழ்க்க மர்ம நபர்கள் சதி செய்தார்களா? என பாதுகாப்பு படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வழியாக சென்றது. ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பால பகுதியில் ரயில் சென்றது. அப்போது தண்டவாளத்தின் மீது இரும்பு ராடு இருப்பதை அறிந்த ரயில் இன்ஜின் டிரைவர் உடனடியாக ரயிலை பாதுகாப்பாக நிறுத்தினர். ரயில் திடீரென பாதி வழியில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அதில் இருந்த பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். எதற்காக ரயில் நிறுத்தப்பட்டது என்ற பதற்றம் அவர்களுக்கு ஏற்பட்டது.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்நிலைய அதிகாரிகளுக்கும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கும் ரயில் இன்ஜின் டிரைவர் தகவல் கொடுத்தார். அதன்பேரில் ரயில் நிலைய அதிகாரிகளும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்த இரும்பு ராடை அகற்றினர். அதன்பிறகு சிறிது காலதாமதத்திற்கு பிறகு ரயில் மீண்டும் இயக்கப்பட்டது. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார் தண்டவாளத்தில் இரும்பு ராடை வைத்த நபர்கள் யார், ரயிலை கவிழ்க்க சதி செய்தார்களா என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரயில் திடீரென நின்றதாலும், தண்டவாளத்தில் இரும்பு ராடு இருந்ததை கண்டும் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: